புதன், 13 ஜனவரி, 2010

இமாம் ஜஃபர் ஸாதிக் (அலை) அவர்கள் அருளிய (ஏகத்துவ விளக்கம்)

மஸ்ஜிதுன் நபவியில்
முஹம்மத் பின் சினான் என்பவரின் அறிவிப்பின் படி அல் முபழ்ழல் பின் உமர் பின்வருமாறு கூறுகிறார்:
ஒரு நாள் அஸர் தொழுகைக்குப் பின் நபியவர்களின் அடக்கஸ்தலத்திற்கும் மிம்பர் மேடைக்கும் மத்தியில் அமர்ந்திருந்தேன்.அல்லாஹ் நமது கருணை நபியவரகள்; மீது அருளி இருக்கும் சிறப்பையும் கண்ணியத்தையும் உயர்வையும் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன்.அன்னாரது மகத்துவத்தையும் நற்குணங்களையும் மகத்தான அந்தஸ்தையும அவர்களது உம்மத்தினN;ர உணரவில்லையே என்ற ஆதங்கத்தில் மூழ்கி இருந்தேன்.
அப்போது இப்னு அபில் அவ்ஜா என்ற நாஸ்திக அறிஞர் அங்கு வந்தார். வந்தவர் எனக்கருகில் அமர கூட வந்த அவரது நண்பர் ஒருவரும் சற்று விலகி அமர்ந்தார். பெருமானாரின் கப்ரைச் சுட்டிக் காட்டியவாறு 'இந்த மண்ணறையில் குடி கொண்டிருப்பவர் அவரது எண்ணிலடங்காத சாதனைகளின் காரணமாக இணையற்ற புகழையும் உயர்வையும் அடைந்து விட்டார்'. என்று இப்னு அபில் அவ்ஜா கூறினார்.
அதை உறுதிப் படுத்துவது போல அவரது நண்பரும் 'அவர்(முஹம்மத்) ஒரு தத்துவ ஞானியாகத் திகழ்ந்தார். அவர் பகுத்தறிவை நிலைகுலையச் செய்யத்தக்க பிரமாண்டமான சிந்தனைகளை முன்வைத்தார். போலிப் பண்டிதர்கள் மனித சிந்தனையின் ஆழத்திற்கே சென்று அதன் மர்மங்களை இனங்காண முற்பட்டனர். ஆனால் எல்லாம் வீணிலேயே முடிந்தன. அவரது தூது பண்பட்ட கல்விமான்களால் ஏற்றுக் கொள்ளப் பட்ட போது பொதுமக்களும் சாரி சாரியாக அவரது நம்பிக்கையை ஏற்றனர்.
அவருடைய தூதை ஏற்ற இடங்களில் வணக்கஸ்தலங்களும் பள்ளிவாசல்களும் உருவாகின. அவரது பெயரை சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்வின் பெயருடன் இணைத்து மலைகள்,சமுத்திரங்கள்,காடு,மேடு என்ற பேதமின்றி கடந்து சென்று ஒரு நாளைக்கு ஐந்து நேரம் பாங்கோசையாகவும் இகாமத்தாகவும் கூறிப் பறை சாற்றி அவரது நினைவும் அவர்களது பணியின் மும்முரமும் மங்காமல் மறையாமல் இருக்கும் படி செய்தார்'.என்று கூறினார்.
இடைமறித்த இப்னு அபில் அவ்ஜா 'முஹம்மதின் விடயத்தை விட்டுத் தள்ளும்.அவரை நினைக்கும் போது எனது சிந்தனை பேதளித்து பகுத்தறிவு திகைப்படைகிறது. நாம் பேச வேண்டிய விடயத்தைப் பேசுவோம்'எனத் தொடர்ந்தார்.
பிறகு அவர் அகிலத்தில் உள்ள வஸ்துகளின் மூலத்தைப் பற்றிப் பேசலானார். இவற்றை யாரும் படைக்கவில்லை எனவும், படைத்தவன்,வடிவமைத்தவன், சீரமைத்தவன் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்றும் யாவும் தானே உருவாகியதென்றும் அவை முடிவும் அழிவும் இன்றி நிரந்தரமாக இயங்கிக் கொண்டிருக்கும் என்றும் வாதிட்டார்.
இப்னு அபில் அவஜாவுடன் தர்க்கம்.
அல் முபழ்ழல் கூறுகிறார் இதைக்கேட்டு கோபம் கொண்ட நான் அவரை நோக்கி இவ்வாறு கூறினேன். 'ஏய் , நம்பிக்கை அற்றவனே! தற்போதைய கட்சிதமான மனிதனாக சிறு பராயம் முதல் உன்னை பல படித்தரங்களாக வளர்த்து ஆளாக்கிய அல்லாஹ்வை நீ நம்ப மறுக்கிறாயா? உன்னைப்பற்றியே நீ சிந்தித்து , உனக்கு நம்பகமாக இயங்கும் உனது உணர்வுகளைப் பற்றி நீ சிந்தித்தால் உன்னுள்ளேயே வல்ல அல்லாஹ்வின் வெளிப்பாடு இருப்பதை நீ உணர்ந்திருப்பாய். அத்தோடு அவனது எல்லையற்ற படைப்பாற்றலையும் மகத்தான ஞானத்தையும் பராமரிக்கும் நேர்த்தியையும் கண்டிருப்பாய்' என்று நான் கூறினேன். என் வார்த்தைகளில் கனல் தெறித்தது .
அதற்கு இப்னு அபில் அவ்ஜா, 'சரி நீ வாதாட்டத்தில் சிறந்தவராயின் உம்மிடம் நாம் வாதாடத் தயார்.உமது வாதத்தை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமாயின் நாம் உம்மைப் பின்பற்றுவோம். உண்மையில் நீர் ஜஉபர் பின் முஹம்மது அஸ்ஸாதிக் அவர்களின் சீடராக இருப்பின் இவ்வாறு பொங்கியெழுவது உமக்கு உகந்ததல்ல. ஏனெனில் நம்முடைய வாதங்களை உம்மை விட அதிகம் அவர் கேட்டு இருக்கிறார். ஆனால் இவ்வாறு அவர் கொதித்தெழுந்ததில்லை. அவர் மிகவும் பொறுமை உள்ளவர். கண்ணியமானவர். நேர்மையும் முதிர்ந்த அறிவும் உள்ளவர். கரடு முரடானவரோ உணர்ச்சி வசப்படக் கூடியவரோ அல்ல. எமது பேச்சை மிகத்தேவையுடன் செவி மடுப்பார். எங்களது கூற்றுக்களையெல்லாம் வெளிப்படுத்தும் படி செய்வார். எமது ஆயுதங்கள் தீர்ந்து விட்டு நாம் அவரை வென்று விட்டோம் என்று நம்பும் போது எமது எல்லா வாதங்களுக்கும் அமைதியாகப் பதிலடியும் விளக்கமும் தர ஆரம்பிப்பார். நிராயுதபாணியாகிய உணர்வோடு அவரது விளக்கங்களுக்கு பதில் கூற முடியாதவர்களாக நாம் திணறுவோம். நீரும் அவரது சமுகத்தை சேர்ந்தவராயின நம்முடன் அதே ரீதியில் வாதிட வாரும்.' என்றார்.
அல் முபழ்ழல் மேலும் கூறுகிறார்: இத்தோடு நான் வெளியேறி யோசனையில் ஆழ்ந்தவனாக உற்சாகமற்று இவர்களது நம்பிக்கையற்ற நிலையைப் பற்றி கவலை கொண்டேன். அகிலத்தின் தாத்பரியத்தை உணராததனால் ஏற்படும் சோதனைகளை எண்ணியவனாக, இஸ்லாத்திற்கு தொண்டு செய்து பாடு பட்டோரை நினைத்தவனாக எனது ஆசான் இமாம் ஜஉபர் ஸாதிக்கின் இருப்பிடம் நோக்கி நான் விரைந்து சென்றேன்.
எனது உற்சாகமற்ற நிலையைக் கண்ட எனது ஆசான் அதற்கான காரணத்தை வினவினார்கள். நான் நாத்திகனுடன் எனக்கு ஏற்பட்ட உரையாடலைக் கூறினேன். அவர்களுக்கு நான் பதில் கூற முற்பட்ட ஆக்ரோசமான விதத்தையும் ஒப்புக் கொண்டேன்.
அப்பொழுது அன்னார் என்னை மறுநாள் அதிகாலை வருமாறு கூறினார்கள். அது சமயம் இந்தப் பிரபஞ்சத்தை சர்வ சக்தியுள்ளவன் வடிவமைத்திருக்கும் விதத்தையும் எம்மை வாயடைக்கச் செய்யும் பிரமாண்டத்தையும் உணர்வு பெற விரும்புவோருக்கு இவ்வையகத்தில் உள்ள மிருகங்கள்,பறவைகள்,ஊர்வன,பூச்சி புழுக்கள்,முதற்கொண்டு கனிகள்,மரங்கள்,தாவரங்கள்,கனிதரும் கனிதராத மரங்கள்,செடி கொடிகள்,கோதுமை உட்படத் தானியங்கள்,உண்ணக்கூடியன,உண்ணக்கூடாதவை, ஆகியவற்றில் அத்தாட்சிகள் இருப்பதையும் எனக்கு விளக்குவதாகவும் கூறினார்கள். 'முஃமின்கள் இதைக்கேட்க புளகாங்கிதம் அடைவார்கள்.நாத்திகர்களோ இதனால் மேலும் குழப்பமடைவார்கள்'. என்றும் கூறினார்கள்.
முதலாவது அமர்வு
அல் முபழ்ழல் மேலும் கூறுவதாவது: மிகவும் திருப்தியுடனும் அமைதியடைந்தவனாகவும் நான் அங்கிருந்து வந்தேன். அன்றைய இரவு எனக்கு மிக நீண்ட இரவாகத் தோன்றியது. ஏனெனில் அவர்கள் வாக்களித்த விளக்கங்களைக் கேட்பதில் நான் அவ்வளவு ஆர்வம் கொண்டிருந்தேன். அதிகாலையானதும் உடனே அவர்கள் சமூகத்திற்குச் சென்றேன். அனுமதி கிடைத்ததும் அவர்களின் அறைக்குள் சென்றேன். என்னை அமருமாறு பணித்தார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் தனிமையில் இருக்கும் தனியான சிறு மாடி அறையொன்றை நாடிச்செல்ல நானும் அவர்களின் கட்டளைப் படி பின் தொடரலானேன். அவ்வறைக்குள் நாம் இருவரும் சென்று அமர்ந்த பின் அவர்கள்: 'முபழ்ழலே!நான் உனக்கு வாக்களித்த தெளிவுகளைக் கேட்க நீர் ஆவலாக இருந்ததால் கடந்த இரவு மிக நீளமானதாக இருந்திருக்குமே'. என்று கூற நான் முறுவலுடன் ஒப்புக் கொண்டேன்.
'முபழ்ழலே!அல்லாஹ் எல்லாவற்றிற்கும் முன்பே இருக்கிறான். அத்தோடு நிரந்தரமாக அவன் என்றும் இருப்பான். எங்களுள் அவன் ஏற்படுத்தி இருக்கும் உள் உணர்வுகளும், எங்களுக்கு அவன் அருளியிருக்கும் சகல அருட்கொடைகளுக்கும் முதலில் நன்றி செலுத்துவோம். அவன் எங்களைக் கணக்கற்ற படைப்பினங்களுள் தேர்ந்தெடுத்து அவனைப் பற்றிய ஞானத்தையும் நல்கி சகல உயிரினங்களுக்கும் எஜமானர்களாக எம்மை ஆக்கியுள்ளான்.' என்று அவர்கள் கூறி ஆரம்பித்தார்கள். நான் 'ஆசானே!தாங்கள் கூறுபவற்றை எழுதிக்கொள்ள எனக்கு அனுமதி உண்டா?' என்று பணிவுடன் வினவினேன். 'எழுதிக்கொள்ளும் முபழ்ழலே' என்றனர் அவர்கள்.
தொடர்ந்து இமாம் சாதிக் அவர்கள் கூறலானார்கள். 'முபழ்ழலே!மன வலிமையற்றவர்கள் படைப்பினங்களின் நோக்கத்தையும் அடிப்படையையும் காண முடியாதவர்களாக ஆகி விட்டார்கள். அத்தோடு கடலிலும் தரையிலும் மலைகளிளும் பள்ளத்தாக்குகளிளும் அல்லாஹ் விதவிதமாகப் படைத்திருப்பதில் அவனது நியாயத்தையும் அறிவு ஞானத்தையும் இனங்காணவும் வீணர்கள் தவறி விட்டனர். இவற்றை அவர்களது புத்தியின் பலஹீனத்தால் நம்ப மறுத்தனர். அகக் கண் குருடாயிருப்பதால் இவற்றின் தாத்பரியங்களைக் காணவும் முடியாது போயினர். இவர்களின் இந்த மூடத்தனமான மறுப்பு இவை அனைத்தும் படைப்பாளி ஒருவன் இல்லாமலே தாமே உருவாயின என்றும் இவற்றை வடிவமைத்தவனோ பராமரிப்பவனோ இல்லை என்றும் கூறும் மடமையில் இவர்களைத் தள்ளி விட்டது.
இவர்களது இந்தக் கூற்றுக்கள் எல்லாவற்றில் இருந்தும் அல்லாஹ் மிகத் தூய்மையானவன். அவர்களுக்குக் கேடு உண்டாகட்டும். எவ்வளவு மோசமான வழி கேட்டில் இவர்கள் இருக்கிறார்கள்.
இவர்களது உதாரணம் என்ன தெரியுமா? இரு கண்களும் குருடான ஒருவன் நன்றாக அலங்கரிக்கப் பட்டபல அறைகள் கொண்ட மாளிகையினுள் தட்டுத் தடுமாறியவனாக இரு கைகளையும் நீட்டிய வண்ணம் நுழைகிறான். விலை மதிப்பற்ற மரச்சாமான்கள்,அலங்காரப்பொருட்கள் ,கலை அழகும் கண்கவர் வெளிப்பாடும் கொண்ட பொருட்களில் மோதுகிறான். அதன் பெறுமதியையும் கலை நயத்தையும் காணக் கண்ணில்லாமல் மோதிக் கொண்ட எரிச்சலில் முணுமுணுத்தவனாக ,ஒவ்வொரு அறையாக நுழைய முற்படுகின்றான். எனினும் இருளைத் தவிர வேறெதுவும் அவனுக்குத் தென்படாததால் குழம்பிப் பின்வாங்குகிறான். ஏனைய அறைகளில் உள்ள உயர்ந்த பட்டாடைகளையும் முத்து மாணிக்க ஆபரணங்களையும் தடவிப் பார்த்து குழப்பமடைந்து வெறுப்படைகிறான்.
மேலும் சில அறைகளில் உள்ள உணவுப் பொருட்களைத் தடவிப் பார்த்து அதன் நிறத்தையோ அதன் ஊட்டங்களையோ உணர முற்படாமல் உட்கொண்டு நன்றி மறந்து அந்த மாளிகையின் அத்தனை பிரமாண்டங்களையும் காண முடியாத மன உளைச்சளில் வெறித்தனமாக அவற்றைத் தவறாக விமர்சித்து நஷ்டவாளியாகிறான்.
இவ்வுவமை கடவுளே இல்லை என்று கூறும் கபோதிகளுக்குப் பொருந்தும். இத போன்றுதான் உலகம் முழுவதும் சுற்றித் தரிந்தாலும அல்லாஹவின் அற்புதப் படைப்புகளின்; அழகைக் காண அகக் கண் இல்லாமல், படைப்பினங்களின் சித்தாந்தங்களையோ அவற்றின் நோக்கங்களையோ, அவை பராமரிக்கப் படும் நேர்த்தியையோ காணாமல் இறுமாப்புடன் வாதிட்டாலும் உள்ளத்தால் குழம்பித் திகைத்தவனாக தடுமாறுகிறான். மேலும் சிலர் படைப்பினங்களின் தத்துவங்களைப் புரிந்து கொள்ளாது அல்லாஹ் நோக்கத்துடன் அமைத்திருக்கும் சில குறைகளைப் படைப்பின் பலவீனமாகக் கருதுவர்.
மானி என்பவரை வழிப்படுபவர்கள் போன்று, (இவர் சொராஸ்திரிய மதத்தைச் சேர்ந்தவர். நபி ஈஸாவின் தூதுத்துவத்தை ஏற்றாலும் நபி மூஸாவின் தூதை மறுத்துவந்தவர். உர்தசி என்பவரின் மகனான இவர் சாபூர் மன்னரின் காலத்தில் வாழ்ந்தார். இவர் விசித்திரமான இரு கடவுள் நம்பிக்கையைத் தோற்றுவித்தார். நல்லவற்றைப் படைப்பவன் ஒளிமயமான ஒரு கடவுள் என்றும் கெட்ட இருண்ட தீய வெறுக்கத்தக்கவற்றைப் படைத்தவன் இருள் மயமான மற்றொரு கடவுள் என்பதும் இவரது வாதம்.) பகிரங்கமாக தவரான கருத்துக்களைப் பறை சாற்றியும் வருகின்றனர்.
ஆகவே அந்த தாத்பரியங்களை உணரும் பாக்கியத்தை அடைந்தவர்களின் கடமை யாதெனில் அவனின் படைப்பின் அழகையும் அதன் உள்ளே அமைந்திருக்கும் தத்துவங்களையும் அறிய முற்படும் அவனது படைப்பாற்றலை புகழ்ந்து அவனையே இணையற்ற நாயனாகக் கொண்டு இவ்வருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதாகும்.
அல்லாஹ் திருமறையில், 'நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு நாம் அதிகப் படுத்துவோம். (நன்றி மறந்து)மாறு செய்தால் எனது வேதனை கடினமானது.' என்று கூறி இருப்பதையும் நினைவு படுத்திக் கொள்க.
பிரபஞ்சமும் அதன் பகுதிகளும்.
'முபழ்ழலே இப்பிரபஞ்சத்தின் கட்டமைப்பே உலக மாந்தருக்க சர்வ வல்லமை பொருந்திய அல்லாஹ் ஒருவன் இருப்பதற்கான மகத்தானதோர் அத்தாட்சியாகும். அதன் பகுதிகள் எவ்வாறு கச்சிதமாகப் பிpணைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. இவ்வுலகத்தையும் அதனைச் சார்ந்த வானம் மற்றும் சூரியன்,நிலவு முதலியவற்றை நோக்குகையில் வசிப்பவர்களது சகல தேவைகiயும் கருத்தில் கொண்டு உருவாக்கப் பட்ட நேர்த்தியான வீடொன்றை அது ஒத்து இருப்பதை நீங்கள் உணரலாம். வானம் ஒரு பிரமாண்டமான கூறை போன்றும நடசத்திரங்கள் அழகான விளக்குகளாகவும் உள்ளன. அத்தோடு சகல தெவைககளையும் பூர்த்தி செய்ய சகலதும் தயார் நிலையில் இருப்பதையும் காணலாம்.
மனிதன் அங்கு வசிக்கிறான். இவ்வீட்டின் சகல சாதனங்களையும் தன் வசப்படுத்திப் பயன் பெறுகிறான். மேலும் அவனது சகல துறைத் தேவைகளுக்கும் உரிய விதவிதத் தாவரங்களும் கனிகளும் தானியங்களும் அவனது கால்நடைகளக்குத் தேவையான தீவனங்களும் நோய்களுக்கான மூலிகைகளும் அலங்காரப் பொருட்களும் மலர்களும் வாசனைத் திரவியங்களும் பறவைகளும் அவற்றின் உணவு வகைகளும் ஊட்ட உணவுகளும் நாட்கால் பிராணிகளுக்குத் தேவையான மூலிகைகள் என்பனவும் உண்டு.
இந்த அழகான நிர்வாக அமைப்பே படைத்துப் பரிபாலிப்;பவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கு ஆணித்தரமான ஆதாரம் என்பதனையும் இவற்றின் சூட்சுமம்,கலவை,சுழற்சி முதலியனவே சிருஷ்டி கருத்தா ஒருவன் இருப்பதைப் பறை சாற்றுகின்றன என்றும் அறிவுள்ள எவனும் உணரலாம். எண்ணிலடங்காத உயிருள்ள ,உயிரற்ற வஸ்துகளைப் படைத்து அனைத்தையும் ஒருங்கிணைத்து இயக்கிக் கொண்டிருப்பவன் மிகவும் உயர்ந்தவன். மறுப்போர் கூறும் குறைகளில் .இருந்து தூயவன்'.
மனிதனைப் படைத்தல்
'முபழ்ழலே!நாம் இப்பொழுது மனிதனைப் படைத்தல் பற்றி பேசுவோம். அதன் மூலம் நீர் சில படிப்பினைகளைப் பெறலாம். இதன் முதல் படித்தரமாக சுக்கிலம் கருப்பையுள் இடம் கொள்வதைக் குறிப்பிடலாம். அது மூன்று வகையான தடுப்புகளையும் மூன்று வகையான இருள்களையும் கொண்டுள்ளது. முதல் தடுப்புச் சுவராகத் தாயின் வயிற்றைக் குறிப்பிடலாம்.இது, கருவினால் ஊட்டங்களைப் பராமரிக்கவோ வரக்கூடிய தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியாத நிலையாகும். தொப்புள் கொடியின் திரவம் அதன் ஊட்டங்களாகச் செயல் பட்டு தாவரங்களுக்கத் தண்ணீர் மலர்ச்சி அளிப்பது போல் வளரச் செய்து சிசுவின் மேல்த் தோல் உண்டாகி வெளித் தாக்கங்களை அது முறியடிக்குமளவு சக்தி பெறச் செய்கிறது. சிசுவின் கண்களும் ஒளித் தாக்கங்களைத் தாங்கும் அளவு கடினமானதாக ஆகிறது.
இவ்வாறாக சிசு வெளியுலகிற்கு வரத் தகுதி பெற்றதும் அச் செய்தி தாய்க்கு வலியாகக் கிடைக்க அவள் அந்த சிசுவை வெளிப்படுத்தத் துடிக்கிறாள். சிசு வெளியானவுடன் அதுவரை அதன் வளர்ச்சிக்குதவிய வழி நிறுத்தப்பட்டு அது மதுரமான பாலெனும வடிவில் தாயின் மார்புகள்; மூரம் சிசவிற்குக் கிடைக்கச் செய்யும் இறைவனின் சூட்சுமம் தொடர்கிறது. அதன் நிறம்,சுவை,தன்மை,ஊடட்மளிக்கும் விதம் இங்கு மாறுபடுவதைக் காணலாம்.
பிறந்த உடனேயே சிசு நாவையும் உதடுகளையும் சப்புக் கொட்டி வாய் மூலம் ஊட்டங்களைப் பெறத் தனக்கிருக்கும் விருப்பத்தையும் அதற்காக தனது உடர் தகுதி பெற்றிருப்பதையும் உணர்த்துகிறது. தாயின் மார்பகங்களைத் தனது உணவுக் களஞ்சியங்களாக முன் அனுபவமின்றியே அது இனங்காண்கிறது. அச்சிசு தனது உள்ளுறுப்புக்கள் மிருதுவாகவும் கடின உணவுகளை ஜீரணிக்க முதிர்ச்சி பெறும் வரையிலும் இம் முறை தொடர்கிறது.
பற்கள்
சிசு வளர்ச்சியடைந்து அங்குமிங்கும் நடை பயில கடின உணவுகளின் தேவை துளிர் விட உள் உறுப்புகளும் அதற்கேற்ப சமிபாட்டு முதிர்வுள்ளதாக வளர்ச்சியடைகிறது. பருவ வயது வரை இந்த ரீதியிலேயே உடல் ,உணவு சுழற்சி நடை பெறுகிறது. ஆண்மையின் அடையாளமாக முகத்தில் மயிர் வளர்வதும் மிருதுவும் நளினமும் தேவைப் படும் பெண்கள் முகத்தில் அது வளராததும் சிருஷ்டி கர்த்தாவின் கற்பனையே. இந்த ஆண் பெண் ஈர்ப்பு லட்சணங்களே உலக இன விருத்தியை ஏற்படுத்துகின்றது.
முபழ்ழலே!மனிதனின் இந்த மாறு பட்ட படித்தரங்கள் அவனது துளிர்வு, வளர்ச்சி,முதிர்ச்சி போன்றவை அறிவு ஞானமுள்ள சிருஷ்டி கருத்தா ஒருவனின்றி சாத்தியமாகுமா? கருவில் தரிக்கும் உயிரணுவை நோக்கி மாதாமாதாம் வெளிப்படும் மாதவிடாய் திசை திருப்பப் படாவிட்டால் அந்த உயிரணு , தண்ணீர் மறுக்கப்பட்ட விதையொன்று காய்ந்து விடுவது போல் அந்த உயிரும் துளிராமல் கருகிப் போகாதா? பிறந்த பிறகு பல வித கால கட்டங்களுக்குத் தேவையான பொருத்தமான உணவு வகைகளைக் கொடுத்து அவனை வளர்த்து தேவையான தருணங்களில் பற்களை முளைத்து விடாவிட்டால் அவனது கதி என்னவாகி இருக்கும்? பாலை மாத்திரம் அருந்தி அவன் நெடு நாள் உயிர் வாழும் நிலை இருந்திருப்பின் அந்த தாயின் நிலை என்னவாகி இருக்கும்? அவனது முகத்தில் ஆண்மை அடையும் பருவத்தில் மயிரை முளைக்கச் செய்து விடாமல் பெண்மையின் மென்மையுடன் அவனது முகம் இருந்திருப்பின் எப்படி இருக்கம்?
நாத்திகத்தின் அபத்தம்
மேற் கூறப்பட்ட அற்புதமான படைப்பின் படித்தரங்களை மனதில் கொண்டு பார்க்கும் போது நாத்திகவாதப் படி இவை எந்த ஒரு சிருஷ்டி கர்த்தாவும் பராமரிப்பு ஞானமுமின்றி ஏற்படுகின்றது என்பதுஎவ்வாறான அபத்தமாக உள்ளது? தானே உருவான பொருள் எதுவும் கட்டுக் கோப்போ பராமரிப்போ அற்றதாகத்தான் இருக்க முடியும். இதை மறுப்பவன் அறிவீனத்தின உச்சியில் இருக்கிறான். முறையான வடிவம் கொண்ட அழகிய படைப்பும் ஒழுக்கமற்ற அர்த்தமற்ற படைப்பும் துருவங்களைப் போல் மாறு பட்ட விடயங்களாகும். இந்த வையகத்தில் படைக்கப் பட்டிருக்கும் எண்ணிலடங்காத உயிரினங்கள்,தாவரங்கள் மற்றும் சிறிய பெரிய அனைத்துப் படைப்புகளும் நோக்கத்தோடு சூட்சுமமாக பாரிய அறிவு ஞானத்துடன படைக்கப்பட்டு பாதுகாக்கப் பட்டு; வருவதை மனிதனே கண் கூடாக ஒவ்வொரு நொடியிலும் கண்டு வருகிறான். அறிவிலிகளின் கூற்றுக்களைவிட்டும் இறைவன் மிகவும் உயர்ந்தவன்.
சிசுவின் அறிவின் படித்தரம்
ஒரு சிசு பிறக்கும் போதே மிகுந்த அறிவு முதிர்ச்சியுடன் பிறக்கிறது என கற்பனை செய்வோம். அதன் அறிவிற்குப் பல விடயங்கள் தெளிவாகினாலும் அவற்றுக்கு முகங் கொடுக்கத் தேவையான உடல் வலிமையோ உடல் அளவோ இன்றி அந்த சிறிய மனிதன் மிகவும் குழம்பிப் போவான்.
முபழ்ழலே! இந்த உவமையைச் சிந்தியும். ஒரு சிறைக்கைதி திடீரென வேறு மொழி பேசும் ஒரு நாட்டில் உள்ள சிறைக்கு மாற்றப் படுகிறான். அவன் அறிவுத் தெளிவுடையவனாக இருப்பின் முதலில் அவனுக்கு ஏற்படுவது குழப்பமும் கலவரமுமே. அவனால் பிற மொழயொன்றை உடனே கற்க முடியாது. அல்லது புதிய தேசத்து சிறையின் கட்டுப்பாடுகளைப் புரிந்து கொள்ளவோ அதற்கு இசைவாக கீழ் படியவோ அவனால் உடனே முடிவதில்லை.
இதற்கு மாற்றமாக சிறு பராயத்திலேயே ஒருவன் பிற மொழி பேசும் நாடொன்றின் சிறைக்குள் இடப்பட்டால் , அவனது மொழியறிவு முதிர்வடையாத நிலையில் அவன் முன் சொன்ன முதிர்ந்த மனிதன் படும் சிரமத்தை அனுபவிக்க நேரிடாது.
இதே போல்தான் திடீரென இவ்வுலகில் வெளிப்படும் சிசுவும் முதிர்ந்த அறிவுடன் இருப்பின் அதுவும் புதிய சூழலைப் புரிந்துகொள்ள அறிவு இருப்பதன் காரணமாகவே சிரமப்பட நேரிடும். தான் காணும் நிறங்கள,; வடிவங்கள், ஒளிகள், லட்சனங்கள், கேட்கும் ஒலிகள், மொழிகள், ஓசைகள் யாவும் முதிர்ந்த அறிவோடு வரும் சிசுவிற்கு குழப்பத்தையும் பயத்தையுமே ஏற்படச் செய்யும். தான் காண்பது கனவா நனவா என்று வேறுபடுத்த இயலாது சித்தம் பேதலிக்கும். தனக்கு உணவு புகட்டப்படும் விதம்,தான் படுக்கையிலேயே மலம் கழிக்கும் இழிவு போன்றவற்றால் அந்த சிறு மனிதன் சிறுமைப் பட்டு மனம் நொந்து போவான்.
அத மட்டுமன்றி எந்த அறிவும் சக்தியுமற்ற , புரிந்து கொள்ளும் சக்தியுமற்ற சிசுவொன்றை சீராட்டிப் பாதுகாக்கும பாச உணர்வும் தாய்மையின் கனிவும் நிச்சயம் அறிவ முதிர்ச்சியுள்ள குழந்தையொன்றின் விடயத்தில் ஏற்படாது. சிசு அறிவு முதிர்ச்சி இல்லாத ஒன்றாக ஆரம்பத்தில் இருப்பதால் இந்த நிலைகள் எதுவும் சிசுக்கோ,அதைப் பராமரிக்கும் தாய்க்கோ ஏனையோருக்கோ ஏறபடுவதில்லை. சிசுவின் இந்த பலவீனமும் அல்லாஹ் அளித்துள்ள மகததானதொரு அனுகூலமே. அச்சிசவின் அறிவு வளர்ச்சியும் படிப்படியாக தேவைக்கேற்ப அதன் தாயையும் ஏனையோரையும் மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்திய வண்ணமே மெருகேறுகிறது.
ஒவ்வொரு புது விடயத்தையும் ஆர்வத்துடனும் அதிசயத்துடனும் சிசுவும் கற்பதால் குழப்பமின்றி விடயங்களை சிறிது சிறிதாக அறிகிறது. கீழ்ப்படிதல்,தவறு செய்தல்,நஷ்டமடைதல் என்பனவற்றை அதுவே அனுபவப் படிப்பினையாகக் கற்கிறது.
உதவி தேவைப் படும் கதியற்ற நிலையில் குழந்தை ஆரம்பத்தில் இருப்பதால் அதன் மீது தாய்க்கு அனுதாபம் ,பரிவு,பாசம்,கருணை ,பராமரிப்பு போன்ற உணர்வுகள் ஏற்படுகின்றன. அல்லது அது பெரியோரைப் போன்றே முதிர்ந்த அறிவுடன் இருந்தால் அதனுடைய தேவைகளுக்கு உதவி செய்வதில் தாய் எரிச்சலே அடைவாள்.
ஆகவே முபழ்ழலே!சிறிதோ பெரிதோ அனைத்து விடயங்களும் மிகத் தீர்க்கமாகச் சிந்தித்தே வடிவமைக்கப் பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது அல்லவா?
அழுகையின் அனுகூலம்;
முபழ்ழலே!குழந்தைகள் அழுவதால் அவற்றுக்கு ஏற்படும் நன்மைகளைப் பாரும். சிசுக்களின் மூளையில் ஆரம்ப காலத்தில் ஊற்றெடுக்கும் நீரொன்று வெளியாகமலேயே இருக்குமாயின் அது சில நோய்களுக்கு காரணமாகி கண்களில் ஒன்றையும் குருடாக்கி விடலாம்.
குழந்தை தனது தேவைகளை அறிவிக்கும் ஒரு முறையாக அழுகை இருக்க அப்பொழுது கண்ணீர் எனும் வடிவத்தில் மேற் கூறப்பட்ட நீர் வெளியாகி குழந்தையின் கண்களையும சுத்தம் செய்வதுடன் அழுததால் அதன் தேவையும் நிறைவேற்றப் படுகிறது. இது போன்ற இறைவனின் சூட்சுமங்களை கடவுளை மறுப்பவர்கள் காண்பதில்லை. பெரும்பாலும் படைத்தவனின் இவ்வாறான நுணுக்கங்களை படைப்பினங்கள் அறிவதில்லை.
இதே போன்றுதான் சிசுக்களின் வாயிலிருந்து வடியும் சளியும். இதுவும் வெளியேறுவது சிசுவின் நன்மைக்காகவே. வாயனால் சளி வெளியேறுவதற்கும் பிள்ளையின் அறிவு வளர்ச்சியிலும் தொடர்பு இருப்பது, அதிகமாக சளி வடியும் மூளை வளர்ச்சி குள்றிய பிள்ளைகளைப் பார்க்கையில் நாம் உணரலாம். இவை அனைத்தையும் வடிவமைத்த அல்லாஹ் மிக உயர்ந்தவன். சகல புகழும் மேன்மையும் அவனுக்கே. அவனுடைய நன் கொடைகள் எவ்வளவு மகத்தானவை. அதை அறிபவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் நன்றி செலுத்துபவர்களுக்கும் செலுத்தாதவர்களுக்கும் அவற்றை பேதமின்றி வழங்கிக் கொண்டிருக்கிறான் அந்தக் கொடையாளி.
உறுப்புக்கள்
முபழ்ழலே! ஆண் ஜனன உறுப்பைப் பற்றி சிந்தியும். அதை விறைப்படையக் கூடியதாகவும் விந்தை வேகமாகப் பாய்ச்சக் கூடியதாகவும் அமைத்துள்ளான். எனெனில் விந்தைப் பாதுகாத்து கருவாக்கி சிசுவாக்கும் வடிவம் அதற்குத் தரப்படவில்லை. ஆணுறுப்ப மூலம் பாய்ச்சப்படும் விந்து வெளியே ஒழுகிவிடாமல் அது மிக இறுக்கமாகப் பெண்ணின் யோனியினுள் செலுத்தப் படுகிறது. இது எவ்வளவு ஞானமுள்ள ஒருவனின் கற்பனையாக இருக்க முடியும். இவையெல்லாம் தானே நடை பெற முடியுமா? இந்த அறிவிலிகள் கூறுபவற்றை விட்டும் அல்லாஹுதஆலா மிக உயர்ந்து விட்டான்.
முபழ்ழலே! இதெ போல உடலின் ஏனைய உறுப்புக்களை உற்று நோக்குவீராக. கைகளைக் கவனித்தீரா? அவை விடயங்களைக் கையாளத் தரப்பட்டவை. கால்கள் எம்மை நகரச் செய்யவும் விழிகள் பார்ப்பதற்காகவும் வாய் உணவு உற்கொள்ளவும் பேசவும் வயிறு உணவை ஜீரணிக்கச் செய்யவும் ஈரல் சுத்தம் செய்வதற்காகவும் குடல்கள் கழிவை வெளியேற்றவும் ஜனன உறுப்புக்கள் இன விருத்திக்காகவும் தரப்பட்டடுள்ளதையும் அவை ஒவ்வொன்றும் அதனதன் கடமைகள் செய்வதற்காக விதவிதமான வடிவங்களில் மிகவும் பொருத்தமாகவும் கச்சிதமாகவும் படைக்கப் பட்டிருப்பதைக் காணலாம்'.
அப்பொழுது நான் , 'ஆசானே!சில மனிதர்கள் இவை அனைத்தும் இயற்கை தனது இஷ்டப்படி தேவைக்கு ஏற்ப ஏற்படுத்தியது என்கிறார்களே' என்றேன். அதற்கு இமாம் அவர்கள் , 'அவ்வாறாயின் அந்த இயற்கைக்கு அறிவும் ஞானமும் உண்டா? என்று அவர்களிடம் கேட்பீராக'என்றார்.
'அதை அவர்கள் ஆமோதித்தால்அந்த இயற்கையை அறிவு ஞானமுள்ள ஒரு சக்தியாக, இறைவனாக ஏன் ஒப்புக் கொள்ள முடியவில்லை' என்றும் கேளும். இதன் வேடிக்கை என்னவென்றால் எல்லையில்லா அறிவும் சூட்சுமமும் உள்ள இறைவனால் இவை யாவும் படைக்கப் பட்டன என்று நாம் கூற, இறைவன் என்ற வார்த்தையை மட்டும் மறுக்கும் இவர்கள் , அதிக ஞானமுள்ள ஒன்று இதன் காரணகர்த்தா என்றும் அது என்னவென்றால ஒன்றுமில்லை என்றும் கூறுகின்றனர்.
ஒழுங்கு முறை
படைப்பினங்களின் வியக்கத்தக்க வடிவமைப்பையும் மிகவும் திறமையான பராமரிப்பையும் எங்களைப் போன்றே காணும் இந்த நாத்திகர்கள் இவற்றைச் செய்வதற்கான சக்தியும் அறிவும் உள்ளதாக அந்த பரம் பொருளை ஏற்க மறுக்கின்றனர். ஒவ்வொரு பொருளையும் அவன் கண்மூடித்தனமாகப் படைக்கவில்லை. ஒரு ஒழுங்கு முறையின் அடிப்படையிலேயே சகலதும் உருவாக்கப் பட்டுள்ளன. ஒரு தானிய வித்து முளைப்பதற்கு நீர்அவசியம். நீர் இல்லையேல் தானியத் துளிர்வு இல்லை. ஒரு சிசு ஆண் பெண் சேர்க்கையால் ஏற்படுகிறது. இவர்களது சங்கமமின்றி உயிர் உண்டாவது கிடையாது.
புவியில் உள்ள தண்ணீர் நீராவியாகி மேகமாகிறது. பிறகு மேகங்கள் காற்றினால் இழுத்துச் செல்லப்பட்டு மழை பொழிவிக்கப் படுகிறது. இந்து தொடர் நிகழ்வுகள் இன்றி மழை பெய்வதில்லை. இந்த நாத்திகர்கள் மேற்கூறப்பட்ட சகல சூட்சுமங்களையும் செய்யும் மூலத்தை தவறாக முடிவு செய்துள்ளனர். இது மிகப் பெரிய அறிவீனமாகும்.
உயிரற்ற தண்ணீர் ஒரு விதை உயிர் பெற எவ்வாறு காரணமாகிறது? சில துளி விந்துகள் அறிவும் அழகும் உள்ள மனிதனொருவன் உருவாக எப்படிக் காரணமாகிறது? விதவிதமான பரிமாணங்கள் கொண்ட எலும்பு, தோல், முடி, பற்கள், கண்ணாடிகளை ஒத்த கண்கள், ஈரல், மூளை, குடல், உதிரம் என்றெல்லாம் விதவிதமான வேறுபட்ட வஸ்துகளை எப்படி இந்த ஒரே மாதிரியான சிறு துளி இந்திரியம் தயாரிக்கிறது? சிந்திக்க வேண்டாமா? இதே ரீதியில் இறைவனது சகல படைப்பினங்களைப் பற்றியும் நாம் ஆராய்ந்து தெளிவு பெறலாம்.
சமிபாடு
'முபழ்ழலே! உணவு மூலம் உடலுக்குத் தரப்படும் ஊட்டங்ளைப் பற்றி சிந்தித்துப் பாரும். உணவு வயிறை அடைந்தவுடன் அது மிகவும் மிருதுவானதொரு கூழாக ஆக்கப் படுகிறது. பிறகு அது மயிரிழை போன்ற நாளங்கள் மூலம் ஈரலை நோக்கிச் செலுத்தப் படுகிறது. பிறகு ஈரல் தான் பெற்ற ஊட்டங்களை புருதியாக மாற்றி அதை இருதயத்தினுள் செலுத்துகிறது. பிறகு இருதயம் உடலின் பல பாகங்களுக்கும் அதைப் பாய்ச்சுகிறது. இதற்குத் துணையாக உடல் பூராகவும் படர்ந்து பரவும் இரத்த நாளங்களின் வலையமைப்பு மிகவும் ஆச்சரியமானது. இதே சமயம் இந்த செயற்பாட்டின் போது ஒதுங்கும் கழிவுகளை உடலின் முக்கிய பாகங்களில் கலந்து பாரிய சிக்களையும் நோய்களையும் ஏற்படுத்தாது ஒன்று திரட்டி வெளியாக்கும் செயற்பாடு தனியாக இயங்கிக் கொண்டு இருக்கும். பித்த நீர் பித்தப் பையையும் மலப்பையை நோக்கிக் கழிவுகளும் சிறு நீர்ப் பையை நோக்கி திரவக் கழிவுhளும் செலுத்தப் படுகின்றன.
முபழ்ழலே! மேல் வாரியாகச் சொல்லப் பட்ட மனித உடலினுள் நடை பெறும் நிகழ்வுகளையும் விதவிதமான உறுப்புக்கள் இணைந்து செயல் படுவதையும் கவனித்தீரா? பித்தம், இதயம், ஈரல், மண்ணீரல், சிறுகுடல், வயிறு, நரம்புகள், நாளங்கள், கழிவறைகள் எவ்வாறு திறம்பட ஒருங்கிணைந்து செயற்படுகின்றன.
அவனுக்கே சகல உயர்வும். முன்மாதிரியின்றி அவனே இவைகளை வடிவமைத்து கச்சிதமாக செயல்படவும் செய்கிறானே! புகழுக்கு இவனை விடத் தகுதியானவன் யார்?'
மனிதனின் வளர்ச்சி
'ஞானியே, மனித உடலின் வளர்ச்சியின் படித்தரங்களை மேலும் எனக்கு விளக்குங்கள்' என்று நான் கூறினேன்.
அதற்கு இமாம் அவர்கள் , 'ஏற்கனவே கூறியது போல் மனிதனின் வடிவத்தின் ஆரம்பம் கருப்பையில் விந்தாகத் துளிர் விடும் தருணமாகும். அது யாராலும் காண முடியாத , கைப்பட முடியாத மர்மமான நிலையாகும். அவனுக்குத் தேவையான சகல உறுப்புகளும் பூரணமாக அங்கு உருப்பெறுகின்றன. மூளை, ஈரல், இதயம், நரம்பு மண்டலம், எலும்பு, தோல், கண்கள், சதை நார், கொழுப்பு, இரத்த நாளங்கள் ஆகியன இந்த இருண்ட நெருக்கமான அறையில் அமைக்கப் படுகின்றன. பிறகு இவ்வுலகிற்கு வெளிப்படும் அச்சிசுவின் கச்சதமான உருவத்தை நீ பார்க்கிறாய். பிறகு அதனது வாழ் நாள் பூராகவும் அந்தச் சிசு வளர்ச்சி அடைவதைக் காண்கிறோம். இது மிகவும் ஞானமுள்ள சர்வ வல்லமையுள்ள ஒருவனின் கற்பனை அல்லவா?
முபழ்ழலே! மானிடனின் அறிவுத் திறமையையும் மிருக இனத்தின் அறிவின் அளவையும் கவனித்துப் பார்ப்பீராக! மனிதன் நேராக நிமிர்ந்து நிற்கக் கூடியவனாகப் படைக்கப் பட்டுள்ளான். அழகாக அமரவும் அவனால் மாத்திரமே இயலும். அவன் தனது கரங்களால் பொருட்களைப் பிடிப்பது போல் ஏனைய உயிரினங்களால் முடிவதில்லை.
அல்லாஹ் மனிதனுக்கு மாத்திரம் அருளியுள்ள அறிவுகளையும் அவற்றின் சிலதை எனைய இனங்களுக்குத் தராத சூட்சுமத்தைப் பார்த்தீர்களா? மனிதன் உற்பட பல உயிரினங்களின் காதுகள் ,கண்கள் போன்ற மிக முக்கிய உறுப்புக்கள் உயரமான இடத்தில் பாதுகாப்பாக வைக்கப் பட்டிருப்பதைப் பாரும். அவை கால்களிலோ கீழப் பகுதியிலோ அமைக்கப் பெற்றிருந்தால் அவற்றுக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புண்டு. அவை வயிற்றிலோ மார்பிலோ இருப்பின் சுழற்றிப் பார்ப்பதற்கு சிரமமாகி இருக்கும். அவை தலையில் அமைந்து இருப்பதால் மேற் கூறிய சிரமங்கள்,ஆபத்துக்கள் இன்றி தேவைக்கேற்ப சுழற்றிப் பார்க்க ஏதுவாக இருப்பதைக் காணலாம்.
நமது ஐம்புலன்களும் உலகிலுள்ள சகல விடையங்களையும் நாம் உணர்ந்து பயனடையும் விதத்தில் அமைக்கப் பட்டுள்ளன. கண்கள் நிறங்களையும் ஒளியையும் இனங் காண நமக்கு உதவுகிறது. செவிகள் ஒலிகளைக் கேட்கும் படி உயரமான , மிகப் பொருத்தமான இடத்தில் வைக்கப் பட்டுள்ளன. இதே போலவே சுவை, நுகர்வு, சூடு, குளிர் முதலியவற்றை உணரும் புலன்களும் நமக்கு மிகப் பொருத்தமான இடங்களில் அமைக்கப் பட்டுள்ளன.
நமக்குப் புலன்கள் அமைக்கப் பட்டுள்ளது போலவே அவற்றால் அனுபவிக்கக் கூடிய வர்ணங்கள், ஒலிகள்,ஒளிகள், சுவைகள், வாசனைகள் போன்றவை இல்லா விடில் எமது புலன்களால் எந்தப் பயனும் இருக்காது. ஆகவே முபழ்ழலே! நமக்குப் புலன் உறுப்புக்கள் கெபடுக்கப் பட்டிருப்பதுடன் அவற்றின் உணர்வுகளுக்குத் தேவையானவற்றையும் உலகில் படைத்திருக்கும் வல்லோனை எவ்வாறு நாம் புகழ்வது?
முபழ்ழலே! கண்களை இழந்த ஒருவன் அன்றாட கருமங்களில் சந்திக்கும் இடர்களை சற்று சிந்திப்பீராக. அவன் நடக்கும் பாதையைக்கூட அவனால் காண முடியாது. நிறங்களை இனங்காணவோ அழகை ரசிக்கவோ அவலட்சணத்தையும் தேவையற்றதையும் ஒதுக்கவோ முடியாது. அவன் தவிப்பான். வாளுடன் வரும் எதிரியையோ பாதையில் அவனைத் தடுமாறச் செய்யக் காத்திருக்கும் பாறையையோ பள்ளத்தையோ அவனால் உணரமுடியாது. தனது கரங்களால் எழுதுவது, தொழில் செய்வது உற்பட எந்தக் கருமத்தையும் செய்ய இயலாதவனாக அவன் ஆகி விடுவான்.


செவிப் புலனற்றவனின் நிலையும் ஏறத்தாழ இது போன்றே ஆகும். தனது குறை காரணமாக அவன் ஊமையாக இல்லாவிட்டாலும் மக்களுடன் பேசும் ஆர்வம் இல்லாதவனாகவே இருப்பான். காதுக்கினிய இசையும் பேரிரைச்சலும் அவனுக்கு சமமே. தாம் சொல்வதைக் கேட்க முடியாத இவனுடன் மனிதர் அதிருப்தியடைவர். செய்திகளையோ பேச்சுக்களையோ கேட்க முடியாத இவன் உயிருடனிருந்தும் இறந்தவனைப் போல மக்களால் புறக்கணிக்கப் படுவான்.
அறிவுப் புலன் குறைந்தவன் கால் நடைகளுக்கு சமமாக ஒதுக்கப் படுவான். ஆகவே இந்தப் புலன்கள் அறிவுகள் மனிதனின் தேவைக்கேட்ப பொருத்தமான வடிவத்தில் பொருத்தமான இடங்களில் அமைக்கப் பட்டிருப்பதின் பிண்ணனியில் மாபெரும் அறிவு ஞானம் ஒன்று இயங்குவதை இனங்காண முடியாதவன் எத்தகைய முடவனாவான். நிச்சயமாக இது மிகவும் மிகைத்த அறிவுடையோன் ஒருவனின் கற்பனைகளாகும்.
நான்(முபழ்ழல்) கேட்டேன். 'இமாம் அவர்களே, சில படைப்புகள் எவ்வாறு நீங்கள் குறிப்பிட்ட புலனறிவுகள் இல்லாமல் மேற் கூறப்பட்ட சிரமங்களுக்கு முபங் கொடுக்கின்றன என்பதை மேலும் விளக்க முடியுமா?'அதற்கு இமாம் அவர்கள், 'குறைகள் அனைத்தும் பேரரசனின் எச்சரிக்கையாகும். ஏனையோருக்குப் படிப்பினையாகும். ஆகவே மக்களின் படிப்பினைக்காக ஒருவனிடம் குறைகளை ஏற்படுத்திய அல்லாஹ் அவ்வாறு அவனுக்கு செய்த குறையை அவன் நன்றியுள்ளவனாக இருப்பின் மறுமையில் மிக நிறைவாக ஈடு செய்கிறான். எந்தளவு அது இருக்குமென்றால் உலகிற்கு மீண்டும் பல உடல் குறைபாடுகளுடன் அனுப்பப் படுவதையும் அவற்றுக்குப் பகரமாக மறுமையில் ஈடு செய்யப் படுவதையும் அவன் ஆசை கொள்வான்.
'அல்லாஹ் உறுப்புகளைப் படைத்திருக்கும் எண்ணிக்கையின் சூட்சுமத்தைக் கவனித்தீரா? முபழ்ழலே! தலை ஒன்றை விட அதிகமாக இருப்பின் அதற்குப் பொருத்தமான இடம் ஒன்று இல்லாதிருப்பதை நாம் உணரலாம். அது சமமாக அமைய முடியாது. மனித உடல் சம நிலையை இழந்து தடுமாறும். மேலும் தலையில் அமைக்கப் பட்டுள்ள கண்கள்,வாய்,செவி,நாவு போன்ற உறுப்புக்கள் போதுமான அளவுடன் இருப்பதும் மேலதிகமாக இவை இருப்பதால் எந்தப் பயனும் இல்லாததையும் நாம் காணலாம்.
அதே சமயம் கைகள் இரண்டிற்குப் பகரமாக ஒன்று தரப்பட்டிருந்தால் அவனது அன்றாட இயக்கங்கள் மிக சிரமமானதாகவே அமைந்திருக்கும். சுருங்கக் கூறின் எந்த ஒரு தொழில் செய்பவனோ அல்லது கல்விமானோ ஒரு கரத்தால் செய்யும் போது அக்காரியங்கள் திறம்பட அமையுமெனக் கூற முடியாது.
மனிதனின் குரலைப் பற்றி சிந்தியும் முபழ்ழலே! பற்களும் அவனது ஒலியெழுப்பும் சாதனமாகச் செயல் படுவதைக் காணலாம். நீர் கவனித்தீரா? 'ஸ' சப்தத்தை பற்கள் இன்றி ஒருவனால் எழுப்ப முடியாது. உதடுகளில் குறையிருப்பின் 'ப' சப்தத்தைத் தரவும் முடியாது. நாவு இதை விடக் கனமாக இருந்தால் 'ர' ஸ்வரத்தை தரவும் இயலாது. நுரையீரலில் உள்ள காற்று ஒலியெழுப்பும் நாளங்களுக்குள் செலுத்தப் பட்டு குரல் வளை மூலமாக நாபிக்கமலத்தை அடைந்து பற்களின், உதடுகளின் துணையுடன் எழுத்து வடிவம் பெற்று ஒலி வடிவத்தில் அவை நமது வாயினால் வெளியாகும் அதிசயம் எவ்வளவு மகத்தானது. அத்துடன் குரல் வளை மேலும் ஒரு முக்கிய கடமையாக காற்றை உள்ளே செலுத்தி மனிதன் உயிர் வாழவும் துணை செய்கிறது.
நாவைப் பற்றி சிந்திப்போம். இந்த சிறிய உறுப்பு உலகில் உள்ள சகல சுவைகளையும் நமக்கு உணர்த்தும் சக்தி பெற்றது. கசப்பு, உப்பு, உவர்ப்பு, புளிப்பு மற்றும் இவற்றின் கலவை நீரின் சுவை என்பனவெல்லாம் நாவினால் பிரித்தறியப் படுகிறது.
இதே போலபற்கள் உணவை அரைத்து சமிபாட்டிற்கு துணை செய்வதோடு உதடுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் அரணாகவும் இருக்கிறது. தண்ணீரை உறிஞ்ச உதடுகள் பயன்படுகின்றன. அவை இல்லாவிடில் அளவோடு தண்ணீரை நாம் பருக முடியாமல் சில சமயம் தண்ணீர் நமது தொண்டையில் அயவில்லாமல் உற்சென்று நமக்கு மூச்சடைப்பையும் ஏற்படுத்தக் காரணமாகலாம். உபயோகத்தில் இல்லாத போது நமது வாயை பாதுகாப்பாக மூட உதவும் இரு கதவுகளாகவும் உதடுகள் செயல் படுகின்றன.
இவ்வாறாக மனித உடல் உறுப்புக்களை பல வேலைகளை ஒரே உறுப்பு செய்யும் விதத்திலேயே அல்லாஹ் அமைத்துள்ளான். இது கூறிய ஆயுதம் எவ்வாறு மரம் வெட்டவும் குழி பறிக்கவும் பயன்படுவதைப் போலாகும்.
மூளையை நீர் கவனித்திருப்பீராயின் அது அடுக்கடுக்காக படலங்களைக் கொண்டு உருவாக்கப் பட்டிருப்பதையும் வெளித் தாக்கங்களால் பாதிப்படையாத விதமாக அது மண்டையோட்டால் பாதுகாக்கப் படுவதையும் நீர் பார்த்திருப்பீர். மேலும் பாதுகாக்க அது கம்பளிப் போர்வை ஒன்றினால் மூடப்பட்டிருப்பது போன்று தலை மயிரினால் போர்த்தப் பட்டிருப்பதையும் காணலாம். சிந்தனை ஓட்டங்களைத் தரக் கூடிய இவ்வரிய உறுப்பை இவ்வாறான பாதுகாப்புகள் மூலம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?
முபழ்ழலே!கண் இமைகளைக் கவனித்தீரா? கண்களைத் தொடர்ந்து காத்துக் கொள்ளும் அதே சமயம் பார்வை தடைப்பட்டால் அது நொடிப் பொழுதில் மூடித்திறக்கும் விதம் எவ்வளவு அதிசயமானது.
முபழழ்லே! இதயக் கமலம் எலும்புக் கூட்டினுள் சிறை வைத்துப் பாதுகாக்கப்படும் கரிசனையைப் பாரும். மேலும் தேவையான காற்றையும்,உணவு, பானங்கள் செலுத்த வேறொரு வழியையும் ஒரே பாதையில் அமைக்கப் பட்டிருப்பதைப் பார்த்தீரா? உணவு வகைகளையும் பானங்களையும் நுரையீரலுக்குச் செல்லாமலும் தேவையான காற்றை மட்டும் அதனுள் செலுத்தியும் துள்ளியமாகப் பராமரிப்பவன் யார்?
மேலும் உடலின் கழிவுகள் சிறிது சிறிதாக சேமிக்கப்படுவதையும் ஒரு பை திறந்து திறந்து மூடப்படுவதைப் போன்று அவை கழிவைப் பெற்று பின் மொத்தமாக வெளியாக்கும் நிருவாகத் திறனை நோக்குவீராக. மிருதுவான, கடினமான சகல உணவு வகைகளையும் அரைத்துக் கூழாக்கத் தேவையான சொறசொறப்பான மேற்பரப்பை இரைப்பையிலும் மிருதுவாக்கப்பட்ட உணவின் ஊட்டங்களை கையாளத் தேவையான மிருதுவான வதை அமைப்பை ஈரலுக்கும் கொடுக்கப் பட்டிருக்கும் சூட்சுமத்தைப் பார்ப்பீராக. இவற்றுக்குப் பின்னால் ஒரு வல்லமை இருப்பதை யார் தான் புரிய முடியாது. அறிவும் உணர்ச்சியும் அற்ற இயற்கை என்ற கற்பனை ஒன்றால் இது சாத்தியமாகுமா? நிச்சயம் ஆகாது. இது சர்வ ஞானம் பொருந்திய ஏக வல்லோன் அல்லாஹு தஆலாவின் ஆற்றலே.
எலும்புகளுக்குள் பாதுகாக்கப் படும் மஜ்ஜை எனப்படும் ஊண் பாதுகாக்கப் படும் திறனைப் பார்த்தீரா? வெய்யிலின் வெப்பத்தினால் அது உருகி விடாமலும் அதிக குளிரால் உறைந்து விடாமலும் அது காக்கப் படுகிறதே! உதிரம் உடலினுள் விரைந்து சென்று உயிரோட்டத்தை நடாத்த தனிப்பாதை அமைக்கப் பட்டிருக்கும் விதத்தைப் பார்த்தீரா?
கைவிரல் நகங்களின் தேவையைப் பாரும். அவை இல்லாமல் விரல் நுனிகள் சதையாக இருப்பின் மனிதனுக்கு விரல்களின் மிக சிரமமாகவே இருக்கும். எழுது கோலைப் பிடிப்பது முதல் ஊசைக் கோர்ப்பது வரை எந்த வேலையையும் அவன் சரியாகச் செய்ய முடியாது போயிருக்கும்.
செவித் துவாரங்கள் வளைந்து நெளிந்துஒரு குகையைப் போல் அமைந்திருப்பதனால் பெரும் இடி முழக்கங்கள் மற்றும் காற்று போன்றன நெரடியாக உற் புகுந்து செவித்திரையைப் பழுதாக்கி விடுவது தடுக்கப் பட்டுள்ளது.
மனித இனத்தை ஆண், பெண் என்ற இரு பாலாருடன் அமைத்தவன் யார்? இரு பாலார் வேர்வதால் இன்பம் காண்பதுடன் இன விருத்தியையும் ஏற்பாடு செய்தவன் யார்? உறுப்புக்களைத் தந்தது யார்? மனிதன் உழகை;க வேண்டும் என நாடி அவன் உறுப்புகளை வடிவமைத்தது யார்? மனிதர்களுக்கு தெவைகளைக் கற்பனை செய்தவனே உழைப்பையும் அமைத்தான். தேவைகள் இல்லாவிடில் மனிதன் உழைப்பதற்கு முன் வரமாட்டான். பசியும் தேவையும் இல்லாவிடில் அஅஅவன் ஏன் விவசாயத்தையும் தொழிலையும் செய்ய வேண்டும். குளிர் இல்லாவிட்டால் அவன் ஏன் கம்பளியையும் துணியையும் நெய்ய வேண்டும்?
வல்ல நாயன்தான் இவை அனைத்தையும் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைத்துத் தந்துள்ளான். ஆசையும் தேவையும் உறுப்பும் உழைப்பும் அவனுடைய திட்டமே. இது ஒன்றோடொன்று கைகோர்த்து நடை போடும் அழகைக் காணுவீராக. அதே போல பகுத்தறியும் திறனையும் நமக்கு அவனே அளித்தான். நல்லதையும் தீயதையும் பிரித்தறியச் செய்த அவனே அதன் மூலம் நமக்கு நற்கூலியையும் தண்டனையையும் தருகிறான். தண்டனையோ நற் கூலியோ கிடைக்கும் தகுதி நமக்கு பகுத்தறிவு தரப்பட்டதனாலேயேஏற்படுகி;றது.
இதற்கு மாறாக இவ்வறிவு கொடுக்கப் படாத மிருக இனங்கள் இவ்வாறாக கூலி கொடுக்கப் படுவதில்லை. அவை தாம் உயிர் வாழத் தேவையானதை எந்த வழியிலாவது பெறும் முயற்சியிலேயே விடப்பட்டவை ஆகும். நியாயம், அநியாயம், தண்டனை, நற்கூலி போன்றன அவற்றின் விடயத்தில் இவ்வுலகில் பேணப்படுவதில்லையே.
மனிதனை அறிவும் திட்டமிடலும் உள்ளவனாக ஆக்கியவன் யார்? மனிதனுக்கு ஆற்றலைக் கொடுத்தவன் யார்? நியாயமும் நேர்மையும் மனிதனுக்கு கடமையாக்கியவன் எவனோ அவனே.
முபழ்ழலே! இதது வரை நான் உமக்குக் கூறியவற்றை சிந்திப்பீராக. திட்டமிடலும் அறிவு ஞானமும் இல்லாது இவை சாத்தியமா? அறிவீனர்களின் கூற்றுக்களை விட்டும் வல்ல அல்லாஹ் மிகவும் தூய்மையானவன்.
முபழ்ழலே! இருதயக் கமலத்தை பற்றி அறிவீராக. அதில் பல நுண்ணிய துவாரங்கள் உள்ளன. அவை நுரையீரலுடன் தொடர்புடையவை. இத் தொடர்பு இல்லாவிடில் இருதயம் இறந்து விடும். இது மாபெரும் ஞானியொருவனாலன்றி வடிவமைக்கப்பட முடியுமா? மனிதன் தனக்குள்ளேயே இறைவன் இருப்பதற்கான சான்றுகள் இருப்பதை உணர வேண்டாமா? உதாரணமாக ஒரு கதவு தாழ்ப்பாள் இடப்பட்டிருப்தை நீர் காண்பீராயின் அது எது வித நோக்கமுமின்றி பொருத்தப் பட்டிருப்பதாக நீர் எண்ணுவீரா? நிச்சயம் மாட்டீர். இதே போல ஆண்,பெண் இருபாலாரும் இருவரும் இணையக் கூடிய ஒரு நோக்கத்துடன் படைக்கப் பட்டிருக்கின்றனர். தம்மை பெரும் தத்துவ ஞானிகளாக கூறிக்கொண்டு படைப்பின் இவ்வழகிய தாத்பரியங்களை புரிந்து கொள்ளாத அறிவீனர்களைப் பற்றி என்னென்று சொல்வது.
ஆணின் ஜனன உறுப்பு விறைப் பற்றிருந்தால அது எவ்வாறு பெண்ணின் உறுப்பின் ஆழத்திற்குச் சென்று விந்தைப் பாய்ச்சும்? அல்லது அது எல்லா நேரங்களிலும் விறைப்புற்றிருந்தால் அவன் எவ்வாற அன்றாட கருமங்களைச் செய்வான். அது நாகரீகமற்ற ஒரு காட்சியாக இராதா? அது தேவையின் சமயம் விறைப்படைந்து சன விருத்தியை ஏற்படுத்துவதோடு தேவையற்ற சமயங்களில் சிறிதாகி மனிதனின் கண்ணியத்தையும் காக்கிறது.
முகழ்ழலே ! எப்போதும் அல்லாஹ்வின் அருட் கொடைகளை நன்றியுடன் நோக்குவீராக. உணவும் பானங்களும் ஜீரணமாகி வெளியேறும் விதத்தை நோக்குவீராக. ஒரு திட்டமிட்டுக் கட்டப்பட்ட வீடொன்றில் கழிவறை ஒதுக்குப் புறமாகவும் இயன்றளவு மறைவாக வைக்கப் பட்டிருப்பதையும் காணலாம் அல்லவா? இதே விதமாக மனிதனின் கழிவிடங்களும் உடலின் மறைவான இடத்தில் வைக்கப் பட்டிருப்பதைக் காணலாம். தேவையின் போது அவை வெளிப்படும் விதத்தில் இருப்பதும் சிருஷ்டி கருத்தாவின் கற்பனையாகும். அவனது அருட் கொடைகளை யாராலும் கணக்கிட முடியாது.
முபழ்ழலே!மனிதனின் வாயில் உள்ள பற்களை நோக்கவீராயின் அவை பல வதை வேலைகளைச் செய்யக்கூடிய விதத்தில் மாறுபட்ட வடிவங்களுடன் இருப்பதை காணலாம். சில கூர்மையாக உணவுகளை வெட்டவும் நறுக்கவும் உதவுகின்றன. மேலும் சில எலும்புகளைக் கடித்து அரைக்கவும் உதவுவதைக் காணலாம். தாவர மாமிச உணவு வகைகளை உற்கொள்ள மனித சமிபாட்டு அமைப்பு வடிவமைக்கப் பட்டிருப்பதால் இவ்விரு வகைப் பற்களையும் அல்லாஹ் மனிதனுக்குத் தந்துள்ளான்.
மனிதனின் உடலில் நகமும் முடியும் தொடர்ந்து வளர்வதையும் அவற்றை வெட்ட வேண்டிய தேவை ஏற்படுவதையும் அவற்றை வெட்டி நீக்கும் போது நமக்கு எந்த உணர்வும் ஏற்படுவதில்லை உன்பதைக் கவனிப்பீராக.'
இந்த இடத்தில் நான் 'ஹஸ்ரத் அவர்களே, வளர வளர வெட்டும் தேவையில்லாமல் அவற்றை ஒரே அளவில் ஏனைய உறுப்புகளைப் போல் நிலை பெறச் செய்யாததன் தாத்பரியம் என்ன?' என்று கேட்டேன்.
'முபழ்ழலே! இதே போன்ற அல்லாஹ்வின் பல நன் கொடைகளின் தாத்பரியங்கள் பற்றி ஆழ்ந்து சிந்திக்காவிடில் நம்மால் புரிந்து கொள்ள முடிறாது என்பதை அறிவீராக. உடலின் பல சங்கடங்கள் வியர்வையாக வெளியாகிறது. அது வெளியாக உதவும் நுண்ணிய துவாரங்கள் உடல் பூராகவும் மயிர்கள் முளைக்கும் இடங்களாகப் பரவியிருக்கின்றன. அதே போல விரல்களின் ஆயாசங்களை வெளிப்படுத்தும் வழிகளாக நகங்கள் இருக்கின்றன. இவற்றின் வளர்ச்சியும் அவற்றை கத்தரித்து வெட்டுவதும் மேலும் மேலும் அவை உடலி;ன் ஆயாசங்களின் வாயில்களாகப் புதுப்பிக்கப் படுகின்றன. இதனால்தான் இவற்றை அடிக்கடி நீக்குவது சுன்னத்தாக்கப் பட்டுள்ளது. இச்செயல்கள் மனிதனின் ஆரோக்கியத்துடன் தொடர்புள்ளவை. இவ்வாறு செய்யாதவர்களிடம் பல நோய்கள் குடி கொண்டு விடும்.
இதே போன்று முடி மனிதனுக்கு இடைஞ்சல் தரக்கூடிய எந்த இடத்திலும் வளர்வதில்லை. வாயின் உள்ளே, உள்ளங் கைகளில் முடி வளராது. கண்களின் உள்ளே உரோமம் வளர்ந்தால் அது எவ்வளவு அசௌகரியமாக இருக்கும். மிருகங்கள் விடயத்திலும் இந்த வடிவமைப்பு ஆக்கப்பட்டிருப்பதைக் காணலாம். பாதுகாப்பும் வசதியும் பேணப்பட்டு உடலுக்கு கேடு வருவது தடுக்கப் படும் நோக்குடன் இவை திட்டமிடப் பட்டுள்ளன. வாயினுள் சுரந்து கொண்டிருக்கும் உமிpழ் நீரின் ஈரமும் நோக்கத்துடனேயே அமைக்கப் பட்டுள்ளது.
மனிதனின் செயல்பாடுகள்
'முபழ்ழலே! மனிதன் உணவு உற்கொள்ளும் உடலுறவில் ஈடுபடும் களைப்பாறும் விதங்களைப் பற்றி சிந்திப்பீராக.இவை யாலும் உடலின் உந்தலால் மனிதன் நாடிச் செல்லும் தேவைகளாகும். பசி உணவைத் தேடச்செய்யும் உடலின் தேவைகளின் அறைகூவலாகும். தூக்கம் உடலுக்குத் தேவையான ஓய்வைப் பெற மனிதனைத் தூண்டும் ஒரு கட்டாய மயக்க நிலையாகும். உலக பராக்கு அதிகம் இருக்கும் கட்டாய நிலையொன்றில் மனிதன் தனது உடலின் ஓய்வைப் பற்றிக் கவலையில்லாமல் உழைக்க முற்படலாம். அது அவனது உடலுக்குத் தீங்காக முடியலாம். ஆனால் உடல் அதற்கு இடம் கொடுக்காமல் தூக்கம் மேலிடச் செய்து அவனைக் கட்டாய ஓய்வின் பால் வீழ்த்தி விடுகிறது.
பசி மூலம் உடலின் தேவை கட்டாயப் படுத்தப் படாவிட்டால் மனிதன் உலக வேலைகளில் மூழ்கி உடலைக் கவனிக்காமல் விட்டு அதை அழித்து விடுவான். இதே போல் உடலுறவின் இன்பம் இல்லாவிட்டால் இனவிருத்தியை மாத்திரம் நாடி ஆண் பெண் சேர்க்கை ஏற்படுவது குறைவாகவே நிகழும். முடிவில் மனித இனமே அழிந்து போகும்.
மேலும் நான்கு செயற்பாடுகள் மனிதனுள இருப்பதை அறிக.
1.உணவைக் கவர்ந்து வாயினுள் செலுத்தச் செய்து வயிற்றை நிரப்பும் செயற்பாடு.
2.அதை தரிபடச் செய்து சமிபாடு மூலம் ஊட்டங்களைப் பிரித்தெடுக்கும் செயற்பாடு.
3.பிரித்தெடுத்த ஊட்டங்களை உடலின் பாகங்களுக்கு விநியோகிக்கும் செயற்பாடு.
4.இறுதியாக தேவையான ஊட்டங்களைப் பிரித்து விநியோகித்த பின் கழிவைப் பாதுகாப்பாக வெளியேற்றும் செயல்.
ஒரே உடலுக்குள் மேற் கூறிய நான்கு இலாக்காக்களின் செயல்திறனை சற்று சிந்திப்பீராக. உடலின் தேவை வளர்ச்சி ஆகியவற்றை இலக்காகக் கொண்டு இவை திட்டமிடப் பட்டுள்ளன. இந்த நால் வகை செயற்பாடுகளில் ஒன்றிலேனும் குறைபாடு ஏற்படின் அது மரணத்தைத் துரிதப்படுத்தும்.
எவ்வளவு தீர்க்கமான நிர்வாக ஆற்றலுடன் இந்த இலாக்காக்களை சர்வ வல்லமை படைத்த அல்லாஹ் நடாத்துகிறான்?
இதை ஓர் உவமையுடன் விளக்குவோம். மனித உடலை ஓர் அரசனின் மாளிகையாகவும்; அதில் பல கடமைகள் கொடுக்கப் பட்ட சேவகர்கள் இருப்பதாகவும் உருவகப் படுத்திக் கொள்வோம். மானிகையின் சகலரதும் உணவுத் தேவை இவர்களது பொறுப்பாகும். இரண்டாவது பிரிவு அந்த உணவு வகைகளைக் களஞ்சியப் படுத்தும் கடமையுள்ளவர்கள் என்போம். மூன்றாவது சாரார் அதை பதப்படுத்தி விநியோகிப்பவர்கள் ஆவர். இறுதியாகத் துப்பரவுத் தொழிலாளர்கள் பிரிவு. இவர்களே கடைசியில் மாளிகையில் இருந்து கழிவுகளைக் கூட்டிப் பெருக்கி வெளியேற்றுபவர்கள்.
மாளிகையின் எஜமான் அரசனாவான். மாளிகையில் வசிப்பவர்களாக உறுப்புக்களைக் கூறலாம். சேவகர்களாக மேற்கூறப்பட்ட நான்கு வித இயக்கங்களையும் கூறலாம். எனது உவமை மிகைப்படுத்தப்பட்ட தேவையற்றது என நீர் எண்ணக் கூடும். எனது உவiமை வைத்தியர்களின் உடற்கூறு ஞான அடிப்படையில் உள்ளதல்ல. வைத்தியர்கள் இவற்றை நோய்களின் காரணங்களையும் சிகிச்சை முறைகளையும் காணும் நோக்கில் பார்க்கின்றனர். ஆனால் நாமோ அதை படைப்பாளியின் நம்பிக்கையை உறுதிப்படுத்தி ஊசலாடும் உள்ளங்களைத் திடப்படுத்தும் நோக்கில் விளக்குகிறோம்.
மானசீக பலம்
'முபழ்ழலே! இது தவிர மனித சிந்தனையில் பொதியப் பட்டுள்ள உருவமற்ற சக்திகளை நோக்குவீராக. சிந்தனை செய்தல், நம்பிக்கை,பிறித்தறிதல், மறதி, ஞாபக சக்தி போன்றவற்றை பற்றி ஆராய்வோம். ஞாபக சக்தி கொடுக்கப் படாத ஒருமனிதனின் நிலை பற்றி சிந்திப்போம்.
அவனது அன்றாட கருமங்கள், கொடுக்கல் வாங்கல், குடும்ப விவகாரங்கள் என்பன எந்தளவு குளறுபடி அடையும்? பிறர் அவனுக்குத் தர வேண்டியதையோ, அவன் பிறருக்குக் கொடுக்க வேண்டியதையோ மறக்கும் ஒருவனின் நிலை எப்படியிருக்கும்? அவனது வாக்குறுதிகள், உடன்படிக்கைகள், அவன் கேட்டவை, அவன் சொன்னவை, எதுவும் நினைவில் இல்லாத மனிதன் வாழ்வதே பெரும் சிரமமாகாதா? தனக்கு நன்மையும் இலாபமும் வந்த விதத்தையோ, நஷ்டமும் துன்பமும் அடைந்த வழியையோ மறப்பவன் எவ்வாறு வாழ்வான்?
அவன் தினமும் நடக்கும் பாதை, செல்ல வேண்டிய திசை ஆகியவற்றைi மறப்பவன் என்ன செய்வான்? ஞாபக சக்தி இல்லாதவன் எதன் மீதும் நம்பிக்கை கொள்ள முடியாமல் அனுபவத்தை வைத்து விடயங்களைத் தீர்மானிக்க முடியாமல், ஒப்பிட்டுப் பார்த்து முடிவு செய்ய முடியாமல் குழம்பித் தவிப்பான். சுருக்கமாக மனித சமுதாய எல்லைக்கு வெளியே அவன் விடப்படுவான்.
மறதி
ஞாபகம் இல்லாதவன் முகங் கொடுக்க வேண்டி வரும் இன்னல்களில் மிகச் சிலதே இங்கு குறிப்பிடப் பட்டன. இன்னும் எண்ணிலடங்காதவை உள்ளன. வேறு வகையில் பார்த்தால் மறதி மனிதனுக்கு ஓரளவு இருக்க வேண்டியதொரு அருட்கொடையாகும். அவனது வாழ்வில் நிகழும் பல கவலையான நிகழ்வுகள், துன்பங்கள், பிரிவுகள், இழப்புகள் அவை நேரும் சமயத்தில் அவனை எவ்வளவு சோகத்தில் ஆழ்த்தி செயலிpழக்கச் செய்கிறது? அதன் நினைவுகள் மாறாமல் மங்காமல் அவனிடம் புதிதாகவே நிலைத்திருந்தால் அவனால் இயல்பான வாழ்க்கை நடவடிக்கைகளில் தொடர்ந்த ஈடுபட முடியுமா? இங்குதான் மறதி மனிதனுக்கு ஒரு அருளாக செயல் பட்டு கவலைகளை அவனுக்கு மறக்கடிக்கும் படி செய்கிறது.
ஞாபகமும் மறதியும் ஒரே செயற்பாட்டின் இரு பகுதிகளாக இருந்து வியக்கத்தகு விதத்தில் மனிதனுக்குப் பயனளிப்பதைப் பார்க்கையில் எந்தளவு வியத்தகு தீர்க்க ஞானமுள்ள ஒருவனது திட்டமிடல் இவை என்பதை நாம் ஊகிக்கலாம்.
பணிவு
பணிவு எனும் பண்பு உயிரினங்களிலேயே மனிதனுக்கு மாத்திரம் தரப்பட்டுள்ள ஒன்றாகும். இது இல்லாது போனால் விருந்தோம்பலோ, விட்டுக் கொடுக்கும் பழக்கமோ, மன்னிக்கும் பண்போ மனிதனிடம் இருந்திருக்காது. பெற்றோருக்குப் பணிவிடை செய்வதும் வாக்குறுதிகள் நிறைவேற்றுவதும் பணிவு என்ற பண்பின் உந்துதலினாலேயே ஆகும்;.
பேசும் எழுதும் ஆற்றல்
'முபழ்ழலே! மனிதனுக்கு அல்லாஹ் அருளியிருக்கும் பேசும் ஆற்றல் பற்றி சிந்திப்பீராக.மேலும் அவனுக்கு மட்டும் தரப்பட்டுள்ள எழுதும் ஆற்றல் பற்றியும் சிந்திப்பீராக. இவை மனிதன் தன் உள்ளுணர்வுகளை தெரிவிக்கும் வெளிப்பாடுகளாகும். அதெ போல் அடுத்தவரின் எண்ணங்களையும் அவன் இதன் மூலமே புரிந்தும் கொள்கிறான். எழுத்தாற்றல் இல்லாதிருப்பின் மனித வரலாறோ, முக்கிய விடயங்களோ தொன்ற தொட்டு மனிதனை வந்தடைந்திருக்காது. இதற்குப் பிறகு வரும் சமுதாயத்தை சென்றடையவும் இயலாது. ஒரு கால கட்டம் மற்றொரு கால கட்டத்தோடு தொடர்பாகாது துண்டிக்கப் பட்டு விடும்.
தொலைவில் உள்ள எந்தச் செய்தியும் இன்னொரு பகுதியை அடையாது. விஞ்ஞானமோ, மருத்துவமோ வளர்ச்சி அடைந்திருக்காது. மார்க்க போதனைகளோ உயர்ந்த சிந்தனைகளோ நிலை பெறாது மறைந்து போயிருக்கும். அறிவும் ஞானமும் முன்னேறியும் இருக்காது.
ஆனால் எழுத்தாற்றல் மனிதனால் கண்டு பிடிக்கப்பட்டதுதானே என்று நீர் சிந்திக்கக் கூடும். இது உண்மையல்ல. உலகில் பல பொருட்களைக் கண்டு பிடித்ததாக மனிதன் கூறிக்கொண்டாலும் இன்ன மொழியை நான் கண்டு பிடித்தேன் அல்லது நாம் கண்டு பிடித்தோம் என்று யாரும் கூறிக் கொள்வதில்லை.
உலகிலுள்ள சகல மொழிகளினதும் ஆசான் அல்லாஹ்வே. அது தவிர அல்லாஹ் மனிதனுக்கு நாவைக் கொடுத்திருக்கிறான் என்பதை நாம் மறக்க முடியுமா? மொழிகளின் உரிமையாளர் யாராயிருப்பினும் நாவின்றி அவற்றைப் பேச முடியுமா? அறிவும் சிந்திப்பதும் இல்லாத பட்சத்தில் மொழிகளால் என்ன பயன்? அதே போல் விரல்கள் தரப்படாவிட்டால் எழுதுவது எவ்வாறு சாத்தியமாகும்?
மிருகங்களுக்கு மறுக்கபபட்ட இவ்வாற்றல்கள் மனிதனுக்குத் தரப்பட்டிருப்பதிலேயே இந்த அருட்கொடையில் மகத்துவம் பொதிந்துள்ளதை மனிதன் நன்றியுடன் உணர வேண்டாமா? அல்லாஹ் மனிதனிடம் எந்தத் தேவையும் அற்றவன்.
மனிதனுக்கு தரப்பட்டுள்ள அறிவு
மனிதனுக்கு மட்டும் தரப்பட்டுள்ள பகுத்தறிவு பற்றி சிந்திப்பீராக. அவனுக்கு நல்லது கெட்டது எவை என்பதைப் புரிந்து கொள்ளவும் படைப்பினங்கள் பற்றி சிந்தித்து படைத்தவனை நம்பும் நிலைக்கு அவனை உயர்த்துவதற்கும் சிந்தனையும் அறிவும் இனிறியமையாதவை. தர்க்கிக்கவும் நிரூபிக்கவும் மனிதனுக்கு அறிவு தேவைப் படுகிறது. நீதி செலுத்தவும் அன்பு செலுத்தவும் அமானிதத்தைப் பேணவும் நலிந்தோருக்குப் பரிவு காட்டவும் அறிவே அடிப்படை என்பதை யாரும் மறக்க முடியாது.
அறிவின் காரணமாகவே மனிதன் விவசாயம், வியாபாரம், விஞ்ஞானம், மருத்துவம்,கல்வி, பண்ணைத் தொழில்,நீர்ப்பாசனம் என்பவற்றில் ஈடுபடவும் பூமியின் வளங்களை வெளிப்படுத்தவும் ஆராய்ச்சிகளை செய்யவும் ஆழ் கடலில் மூழ்கி அதன் இரகசியங்களை அறியவும் பறைவைகள், மிருகங்கள் முதலியவற்றை வேட்டையாடவும் வேலை வாங்கவும் மதங்களைப் பின் பற்றவும் உபதேசம் பெறவும் கொடுக்கவும் என எண்ணில் அடங்காத விடயங்களின் அடிப்படை அறிவே ஆகும். பூமியின் மேலும் அந்தரங்கத்திலும் வானிலும் சமுத்திரத்திலும் அண்ட சராசரத்திலும் உள்ள தெரியக் கூடிய, மறைவான, சகல விடயங்களும் அறிவின் அடிப்படையிலேயே தேடப்படுகின்றன.
மனிதனுக்கு மறைக்கப்பட்டவை
மனிதனின் மரணத்தின் தருணம் அவனுக்கு மறைக்கப் பட்டுள்ளது. அது உறுதியாக இருப்பின் மனிதன் பயத்தால் செயலிழந்து படுத்த படுக்கையாகி விடுவான். சகலவற்றையும் இழந்தவனாகி விடுவான். தன் சொத்து சுகங்களை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இழக்கும் விடயம் தெரிந்த ஒருவனுடைய நிலை எவ்வாறு இருக்கும்? இன்ன நேரத்தில் தனது வாழ்வு முடியப் போகிறது என்பதை அறிந்த ஒருவனுடைய நிலை அதை விடப் பயங்கரமாகவே இருக்கும்.
ஆகவே இந்த இரகசியம் மறைக்கப் பட்டிருப்பதும் ஒரு அருளே. மாறாக ஒருவனுடைய முடிவு பல ஆண்டுகளுக்கு முன்பே நிகழும் என்று திட்டவட்டமாக தெரிந்த ஒருவனுடைய நிலை எவ்வாறு இருக்கும்? அவன் தனது நிச்சயமான மிக நீண்ட வாழ்நாள் மீது இறுமாப்பும் அசாத்திய துணிச்சலும் கொண்டவனாக தறி கெட்டு அலைவான். இறுதி நெருங்கும் போது தீமைகளை விட்டு விலகி பாவ மன்னிப்புக் கேட்டு ஈடேறலாம் என்ற மூட எண்ணத்துடன் வாழ்வான். இதுவும் மனிதனுக்கு கேடாகவே முடியும்.
மரணத்தை மறைத்திருப்பது இங்கும் அத்தகையவனுக்கு நன்மையாகவே ஆகின்றது. மரணம் எந்தளவு நெருக்கமோ அல்லது தொலைவில் உள்ளதோ என்று அறியாத நிலையில் மனம் வருந்தி ஒருவன் சாலிஹானவனாக மாறுவதும் அல்லாஹ் அதை ஏற்பதும் உண்டு. ஆனால் முடிவை அறிந்த ஒருவன் இறுதி நெருங்கும் போது நல்லவனாக மாற நினைப்பது இறைவனை கேலி செய்வது போலாகும்.
கனவுகள்
'முபழ்ழலே! கனவுகளையும் அதனைச் சார்ந்துள்ள சூட்சுமங்களையும் சிந்தியும். சில கனவுகள் நனவாகின்றன. சில ஆவதில்லை. இவை கலந்தே இருக்கின்றன. எல்லா கனவுகளும் உண்மையில் நடந்து விட்டால் எல்லோரும் தீர்க்கதரிசிகள் ஆவார்கள். எதுவுமே நனவாவதில்லை எனில் கனவுகளால் எந்தப் பயனும் இல்லை. அதன் சமிக்ஞை மற்றும் வழி நடத்தல் காரணமாக மனிதன் பயனடைகிறான். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை வெறும் காட்சிகளே.
முபழ்ழலே! உலகில் படைக்கப் பட்டுள்ள மனிதனுக்கு பயன் தரும் விடயங்களைப் பார்ப்பீராக. வீடுகளைக் கட்ட கல்லும் மண்ணும் படகுகள் கட்ட மரங்களும் ஏனைய தொழில்களுக்கு உலோhகங்களும் முத்தும் மாணிக்கமும் தங்கமும் வெள்ளியும் வைரமும் அலங்காரத்திற்குரிய பொக்கிசங்களாகவும் தானியங்களும் கனிகளும் மாமிசமும் உணவாகவும் வாசனைத் திரவியங்களும் மருந்து மூலிகைகளும் சவாரிக்கும் சுமையை எடுத்துச் செல்லவும் கால் நடைகளையும் இன்னும் எண்ணில் அடங்காத வஸ்துக்கள் பலவித தேவைகளுக்கும் பயன்களுக்கும் படைக்கப் பட்டிருப்பதையும் காண்கிறீர். இதில் எதையும் தன் ஆக்கம் என்று வாதிட முடியாத மனிதன் இவற்றிற்கு உரியவன் ஒருவன் இருப்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறான்.
முபழ்ழலே! ஒரு மனிதன் வீடொன்றில் பிரவேசிக்கிறான். அங்கு சகல பொருட்களும் அழகாக வைக்கப்பட்டு ஆவி பறக்கும் அறுசுவை உணவும் மேசையில் வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் எவரையும் அங்கு காணமுடியவில்லை என்றிருந்தாலும் எந்த மூடனாவது இவை தானே சமைக்கப்பட்டு பரிமாறப்பட்டு மேஜையில் வந்து அமர்ந்தன என்று எண்ணுவானா? ஒரு வீட்டின் இத்தகு ஏற்பாடுகள் தானே நடக்க முடியாது என்று வாதிடும் அதே மனிதன் அதை விட பிரமாண்டமான உலகமும் அதனைச் சூழ உள்ள பல்லாயிரக் கணக்கான நிருவாகமும் தானே நடை பெறுகின்றது உன வாதிடுவது எவ்வளவு அபத்தமானது.
முபழ்ழலே! மனிதனுக்கு அல்லாஹ் உணவு தானியங்களைப் படைத்து அருளியிருக்கும் விதத்தில் உள்ள சூட்சுமங்களைப் பாரும். தானயத்தை அல்லாஹ் மண்ணிலிருந்து வெளிப்படுத்தி தந்துவிட்டு பிறகு அதை அறுவடை செய்து அரைத்து மாவாக்கி ரொட்டியாக்கும் உழைப்பை மனிதனிடம் விட்டுள்ளான். பருத்தியை பூமியிலிருந்த முளைக்கச் செய்யும் நாயன் அதை அறுவடை செய்து நூல் நூற்று துணி நெய்யும் வேலையை மனிதனைச் செய்யும்படி விட்டுள்ளான். மூலிகைகளைப் பல நோய் நிவாரணங்களுக்காக அல்லாஹ் தந்திருந்தாலும் அவற்றைக் கலப்பதையும் எந்த நோய்க்கு எந்தக் கலவை பயன் தரும் எனும் அறிவைத் தேடிக் கொள்வதையும் மனிதனிடம் விட்டுள்ளான். உலகத் தேவைகள் பல இவ்வாறே பூர்த்தி செய்து கொள்ளும் ஒரு நடைமுறையை அல்லாஹ் ஆக்கியுள்ளான். இல்லாவிடில் எந்த உழைப்பினதும் அசைவினதுதம் தேவையின்றி மனிதன் சோம்பேறியாகி மனிதன் சோர்ந்து மடிந்து போவான். உழைப்பின்றிப் பெறப்படும் எந்த ஒரு பொருளும் மனிதனிடம் பெறுமதியும் பெறுவதில்லை.
அத்தோடு எந்த உழைப்பும் முயற்சியும் இல்லாமல் வெறுமனே இருப்பதை மனிதனே பெரும்பாலும் விரும்புவதில்லை. அதுவும் வாள் நாள் பூராக செயற்பாடுகளின்றி இருப்பதை மனிதன் விரும்புவதில்லை. அது அவனது உடல் உறுப்புகளுக்கும் நல்லதல்ல.
ரொட்டியும் தண்ணீரும்
முபழ்ழலே! மனிதனின் முதலாவது அடிப்படைத் தேவை உணவும் தண்ணீருமே ஆகும். அதிலும் தண்ணீர் மனிதன் உயிர் வாழ மிகவும் அவசியமானது. பசியை அவனால் தாகத்தை விட அதிக காலம் பொறுத்துக் கொள்ள முடியும். அது மட்டுமன்றி தண்ணீர் அவனுக்கு மேலும் பல தேவைகளுக்கு இன்றியமையாதது. விவசாயம், சுத்தமாக்குதல், கால்நடைகளின் உயிர் வாழ்வு என அதன் பயன் அதிகமுள்ளது. ஆகவே இந்தத் தண்ணீரை அல்லாஹ் சிறு முயற்சி மூலம் பெற்றுக் கொள்ளும் விதத்தில் தாராளமாக வைத்துள்ளான்.
உழைப்பைக் கட்டாயமாக்குவதன் மூலம் அல்லாஹ் மனிதனுக்கு நன்மை செய்யவே நாடுகிறான். கல்விக்காக அனுப்பப்படும் பிள்ளை விளையாட்டில் நேரத்தை அதிகம் வீணாக்கி விடாமல் பாதுகாக்கப் படுகிறான். இதே போல் உழைப்பின் மூலம் சோம்பலும் அழிவும் மனிதனுக்கு ஏற்படாமல் அல்லாஹ் பாதுகாக்கிறான். உழைப்பு அவசியமற்ற நிலையில் வளரும் சீமான் வீட்டுப் பிள்ளைகள் பலர் வீணாகிப் போவதைக் காண்கிறோம்.
மனித உருவ அமைப்பு
மனிதர்கள் வித்தியாசமான உருவ அமைப்பிலேயே படைக்கப் பட்டுள்ளனர். மிருகங்களும் பபறவைகளும் ஒரே மாதிரியாக இருப்பது போல் தோன்றினாலும் அவற்றிற்கிடையே அதன் வேறுபாடு உணரப் படுகின்றது.
இவ்வாறு வித்தியாசமான முக அமைப்புகள், உடல் அமைப்புகள் மனிதர்களுக்கு அத்தியவசியயமானது என்பது தெளிவு. இல்லாவிடில் கொடுக்கல் வாங்கல், குடும்ப உறவுகள், வாக்குகள், அமானிதங்கள் எதையும் பேண முடியாது மனிதன் திண்டாடி விடுவான். அரிதாக இரட்டைச் சகோரர்கள் ஒரே மாதிரி இருப்பதால் வரும் சிக்கல்களை நாம் காணுகிறோம் அல்லவா? ஒருவருக்கு கொடுக்கப்பட வேண்டியதை மற்றவருக்குக் கொடுக்க முற்படுவதும் ஒருவரிடம் கேட்பதை மற்றவரிடம் கேட்பதுமாக தடுமாற்றங்கள் ஏற்படுவதும் உண்டு. முழு உலக மனிதரும் ஒரே உருவ அமைப்பில் இருந்தால் உலகம் எவ்வளவு அல்லோல கல்லோலப் பட்டுப் போகும்?
கோடிக் கணக்கான மனிதர்களைப் படைத்து அத்தனை பேரையும் வேறு வேறு முக ஜாடையுடன் படைப்பது எவ்வளவு பாரிய பொறுப்பு? முகம் போன்ற சிறிய பகுதி ஒன்றில் எந்தளவுதான் வித்தியாசங்களை ஏற்படுத்த முடியும்? இருந்தும் சர்வ வல்லமை பொருந்தியவன் அதில் இயலாதவானாகி விட்டானா? அல்லது அவ்வாறான வல்லமையொன்று இதன் பிண்ணனியில் இல்லாதிருந்தால் இது சாத்தியமாகித்தான் இருக்குமா?
முபழ்ழலே! சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு ஓவியம் ஓர் ஓவியனின்றி தானே ஏற்பட்டதென்பதை நீர் ஏற்பீரா? நிச்சயம் இல்லை. உயிரற்ற ஓவியமொன்றையே ஓவியனின்றி ஏற்பட்டதை ஏற்க மறுக்கும் மனிதன், உடலும் உயிரும் அறிவும் உள்ள மனிதனை தானே ஏற்பட்டவன் என வாதிடுவது எத்தகைய அநியாயம்?
வளர்ச்சி
மனிதன் உற்பட சகல உயிரினங்களும் சிறியதாகப் பிறந்து வளர ஆரம்பித்தாலும் குறிப்பிட்ட ஒரு அளவை அவை தாண்டுவதில்லை என்பதைப் பற்றி சிந்தித்தீரா? இது தற்செயலாக நடைபெறுவதா? இதுவும் தீர்க்கமான ஞானமுள்ள ஒருவனின் திட்டமேயாகும். அப்படியில்லாவிடில் சிறு உயிரினங்களும் பயங்கரமாக வளர்ந்து மனிதன் வாழ முடியாத இடமாக உலகை மாற்றி விடும்.
வலி
வலியும் மிக சூட்சுமமான உணர்வே. வலி என்பது இல்லாவிட்டால் மனிதனின் செயல்கள் எல்லை மீறிப் போய் சரணடைந்து, படைத்தவனை நோக்கி கலங்கியவனாக கையேந்த வேண்டிய நிலை ஏற்படாது. பிறரது வேதனையின் சமயம் கருணையுடன் நடப்பதும் ஏற்படாது. வலி இல்லாதிருப்பின் தண்டனைகள் அர்த்தமற்றதாகி குற்றச் செயல்கள் அதிகரித்து விடும். பிள்ளைகள் பெற்றோரையோ, ஆசான்களையோ பயப்பட மாட்டார்கள்.
ஆண்மை
ஆண்களுக்கு முகத்திலும் உடலில் பல இடங்களிலும் உரோமத்தை அல்லாஹ் அதிகமாகத் தந்துள்ளான். ஏனெனில் அவனே குடும்பத்தின் தலைவனாவான். பெண் நளினமானவளாகவும், ஆணிண் கண்ணுக்கு இனியவளாகவும் இருக்கிறாள். நிர்வாகமும் தலைமைத்துவமும் உரித்தான ஆண் தாடியுடன் கம்பீரமாகத் தோன்றுவதே பொருத்தமாகும்.'
அப்பொழுது பகல் தொழுகையின் நேரம் ஆகிவிட்டதால் இமாம் அவர்கள் எழுந்தனர். என்னை மறு நாள் வரும்படி பணித்தனர். இது வரை கிடைத்த அருமையான விளக்கங்களினால் உள்ளம் பூர்த்தவனாக நான் வீடு திரும்பினேன். அன்றைய இரவு எனது உள்ளம் மிகவும் நிறைவும் சந்தோசமும் பெற்றிருப்பதை உணர்ந்தேன்.
இரண்டாவது அமர்வு
முபழ்ழல் கூறுகிறார்: அதிகாலையில் நான் இமாம் அவர்களைக் காண விரைந்தேன். அனுமதி பெற்று உள்ளே சென்றவுடன் அமருமாறு எனக்கு அவர்கள் கூறினார்கள். தமது பேச்சை தொடர்ந்தார்கள்.
'எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. சகல விடயங்களையும் பரிபாலனம் செய்பவன் அவனே. நன்மை செய்வோருக்கு நற்கூலி அளிக்கிறான். தீமை செய்வோருக்கு தண்டனை அளிக்கிறான். அவனது அருட்கொடைகள் இணையற்றவை. அவனது படைப்பினங்களுக்கு சிறிதேனும் அநீதி இழைக்காதவன். மனிதனே தனக்குத்தான் தீமையும் அநீதியும் இழைத்துக் கொள்கிறான். அல்லாஹ் இதை திருமறை வசனம் மூலம் உறுதி செய்கிறான்.
'அணுவளவு நன்மை செய்தவன் அதனைக் கண்டு கொள்வான்.அணுவளவு தீமை செய்தவன் அதனைக் கண்டு கொள்வான்'. (99:7-8)
இக்கருத்தை உறுதி செய்யும் மேலும் பல திருமறை வசனங்கள் உள்ளன. பொய் உண்மையின் முன் வர முடியாது. இதே கருத்தை நபி மொழியும் உறுதிப் படுத்துகிறது. கருணை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'உங்களது செயல்களின் பிரதிபலிப்புக்களே உங்களை வந்தடையும்.நற்கூலியும் தண்டணையும் இதன் விளைவுகளே. இவற்றால் அல்லாஹ் எந்த இலாப நஷ்டத்தையும் பெற மாட்டான். நீங்களே இதன் விளைவுகளைப் பெறுவீர்கள்.'
இதை கூறியதுடன் இமாம் அவர்கள் தனது தலையை தாழ்த்தியவர்களாக மௌனம் சாதித்தார்கள். பின் கூறினார்கள். ' முபழ்ழலே! பெரும்பாலும் மனிதர்கள் குழப்பம் அடைந்தவர்களாகவும் கண்மூடித்தனமானவர்களாகவும் தனது மனோ இச்சையைப் பின்பற்றியோராகவுமே உள்ளனர். அவர்கள் கண்கள் இருந்தும் பார்க்க மாட்டார்கள். அவர்கள் வாயிருந்தும் ஊமைகள். காதிருந்தும் செவிடர்கள். இழிவான தமது நிலைகளால் திருப்தி அடைகிறார்கள். தாம் நேர் வழியில் இருப்பதாக எண்ணிக் கொண்டுள்ளனர். சிந்திக்கக் கூடிய நல்லோர்களை விட்டும் விலகியவர்கள் இவர்கள். அசுத்தமானவர்களுடனே இவர்கள் இணைகின்றனர்.
மதியற்றோரின் கூற்றை மீண்டும் மீண்டும் கூறியவர்களாக அல்லாஹ்வை மறுத்து, சூனனியத்தையும் இயற்கை என்பதையும் படைப்பின் மூலமாகக் கூறுகின்றனர். திடீர் மரணம் தனக்கு ஏற்பட்டு தான் கூலி கொடுக்கப் படுவதை விரும்பாது தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்பவர்கள். இவர்களது தலை விதி எந்தளவு மோசமானதாக இருக்கிறது. அவர்களது துன்பம் தரும் தண்டணை எவ்வளவு நீளமானதாக ஆகப்போகிறது. அவர்களுடைய தீர்ப்பு நாள் எந்தளவு பயங்கரமானதாக ஆகப்போகிறது! அல்லாஹ் மன்னித்தால் அன்றி இவர்களது முடிவு எவ்வளவு கொடூரமானதாக இருக்கும்!'
இதைக் கேட்ட நான் அழத் தொடங்கினேன். அதற்க இமாம் அவர்கள் 'சஞ்சலம் கொள்ளாதீர் முபழ்ழலே! உமது நம்பிக்கை உம்மை ஈடேறச் செய்யும்.'என்று எனக்கு ஆறுதல் கூறினார்கள்.
உயிரினங்களின் வடிவமைப்பு
இமாம் அவர்கள் தொடர்ந்தார்கள். 'நான் இ;ப்பொழுது மிருக இனங்களைப் பற்றி உமக்கு சற்று விளக்குகிறேன். முதலில் அவற்றின் உடலின் மேற்புற அமைப்பைப் பாரும். அவை கற்களைப் போல் கடினமானதாக இல்லை. அப்படி இருந்திருப்பின் அவற்றின் உடல் செயற்பட இயலாதிருக்கும். மிகவும் பலயீனமானதாகவோ, மிருதுவானதாகவோ அவை இல்லை. அப்படியாயின் அவை சுமைகளை சுமக்கவோ நடமாடவோ முடியாது போயிருக்கும். அவை உறுதியான எலும்புகள் மீது கெட்டியான சதைகள் கொடுக்கப் பட்டு தசை நார்களினால் இயக்கம் எளிதாக்கப் பட்டிருப்பதை நோக்குவீராக. இவை அனைத்தும் கண் கவர் தோலினால் மூடி அலங்கரிக்கப் பட்டுள்ளன. தானே இவை ஆகியிருப்பின் பொம்மைகளும் தமக்குத் தாமே உயிர் கொடுத்துக் கொள்ளாதா?
அவற்றின் உடல் அமைப்பைப் பற்றி ஆழமாக சிந்திப்பீராக. மனிதர்களைப் போன்று அவையும் எலும்பு, வதை, நார் மற்றும் தோலினால் ஆக்கப் பட்டுள்ளன. அவற்றுக்கு கண்களும் காதுகளும் கொடுக்கப் பட்டுள்ளன. இல்லவிட்டால் அவற்றால் மனிதனுக்குப் பயன் அதிகம் இருக்காது. ஆனால் அறிவும் சிந்தனையும் அவற்றுக்கு குறைவாகவே கொடுக்கப் பட்டுள்ளன. ஏனெனில் மனிதனுக்கு கீழ்ப்படிந்து உழைப்பதற்காக அவற்றின் அறிவின் படித்தரம் மனிதனுடையதை விட குறைவாகவே தரப்பட்டுள்ளது.
சிலர் அடிமை விடயத்தைப் பற்றி இங்க வாதிடலாம். மனிதர்களான அவர்களும் கீழ்ப்படிந்து நடக்கின்றனரே எனத் தர்கிக்கலாம். ஆனால் இவர்கள் எண்ணிக்கையில் மிக குறைவானவர்களே. இது போன்றவர்களின் அறிவு மிகத் தாழ்ந்ததாகவே இருப்பதுண்டு. அவ்வாறில்லாத அடிமைகள் அடிமைகள் நிர்பந்தத்தின் காரணமாக சேவை செய்பவர்களாகவே இருப்பர். ஆனால் கால நடைகளும் மனிதர்களுக்கு வசப்பட்ட ஏனைய மிருகங்களும் சிரமத்துடன் மனிதனுக்குக் கீழ்ப் படிவதைக் காணலாம். ஆனால் அடிமை ஒருவனிடம் இவ்வாறான வழிபடுதலைக் காணமுடியாது. அத்தோடு ஒரு மாடோ, கழுதையோ, குதிரையோ அல்லது யானையோ செய்யும் வேலையைப் பல மனிதர்கள் செய்ய நேரிடும். மனிதர்கள் இவற்றைச் செய்தால் மனிதனால் மாத்திரம் செய்ய முடிந்த வேலைகளைச் செய்வதற்கு அவனால் முடியாது போய்விடும்.
முபழ்ழலே, கீழ் காணும் மூன்று வகை உயிரினங்களின் செயற்பாட்டை சிந்திப்பீராக. மனிதன் அறிவு பூர்வ கருமங்களையும் கட்டிட வேலை, தச்சு வேலை, நகை செய்தல், தையல், எழுத்து போன்றவற்றை செய்யும் தேவை உள்ளவனாகையால் அதற்குத் தேவையான கை, உள்ளங்கை, விதவித நீளத்தில் விரல்கள் போன்றன கொடுக்கப் பட்டிருப்பதைக் காணலாம்.
மாமிச பட்சிகளுடைய உள்ளங்கை கெட்டியாகவும் நகங்கள் கூர்மையாகவும் வேட்டைக்குத் தேவையான வடிவத்திலும் இருப்பதைக் காணலாம். ஆனால் மனிதன் செய்வது போன்ற நுணுக்கமான வேலைகளைச் செய்ய இக்கைகளால் முடியாது. அவற்றின் வாய்கள் அகலமாக கூரிய பற்களுடன் உள்ளவை. மிருகங்களைக் கடித்துக் கிழித்து உண்ண அவை உதவுகின்றன.
இலையுண்ணிகள் மிருகங்களை வேட்டையாடவோ, கலை நுணுக்கமான காரியங்களைச் செய்யவோ இயலாத விதத்திலான கரங்களின் அமைப்புக் கொண்டவையாக இருப்பினும் அவற்றின் கால்கள் மேய்ச்சலுக்குத் தேவையான விதத்தில் அமையப் பெற்றிருப்பதைக் காணலாம். சுமை தாங்கும் கால் நடைகளின் பாதங்கள் பூமியைத் திடமாகப் பிடிக்கும் விதத்தில் வட்டமாக உள்ளதைக் காணலாம். அவற்றின் பற்கள் கூர்மையற்றதாகவும் தட்டையாகவும் இலை வகைகளை அரைக்கக் கூடியதாகவும் உள்ளது.
ஆகையால் ஒவ்வொரு மிருக இனமும் அதற்குத் தேவையான கை,கால்.நகம், பற்கள் முதலியவற்றுடன் படைக்கப் பட்டிருப்பதைக் காணலாம். மேலும் நாற்கால் பிராணிகள் தமது தாயைப் பின்பற்றுவதை நோக்குவீராக. மனிதனின் குட்டிகள் போன்று அவற்றை சுமக்கவோ பேணிப் பாதுகாக்கவோ தேவையிருப்பதில்லை என்பதைக் காணலாம். மனிதத் தாய்க்குக் கொடுக்கப் பட்டுள்ள பல அறிவுகளும் ஆற்றல்களும் மிருகங்களுக்கு கொடுக்கப் படாததற்கு இதுவே காரணமாகும்.
பறவைகளிலும் இது போன்ற அமைப்பை நீர் காணலாம். கோழிக் குஞ்சுகள் போன்றவற்றைப் பார்க்கையில் அவை முட்டையிலிருந்து வெளி வந்து சிறிது நேரத்தில் அங்கும் இங்கும் ஓடி இரை தேடுவதைக் காணலாம். புறா காகம் போன்ற பலயீனமான பறவைகளின் குஞ்சுகள் விடயத்தில் அதன் தாய் கூடுதல் கவனம் செலுத்துவதையும் இரையை குஞ்சுகளின் சொண்டினுள் போட்டு விடுவதையும் காணலாம். இந்தக் கவனிப்பு குஞ்சுகள் சுயமாக இரை தேட சக்தி பெறும் வரை நீடிப்பதைக் காணலாம். சர்வ வல்லமை உள்ள அல்லாஹ் இவ்வாறு விதவிதமான மிருக பறவை இனங்களுக்கு வித்தியாசமான முறையில் உணவளிப்பதைக் காணலாம்.
உயிரினங்களுக்கு தரப்பட்டுள்ள கால்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் அவை இரண்டு அல்லது நான்கு என்ற அடிப்படையிலேயே இருக்கிறது. அவை ஒற்றைப் படை எண்ணில் இருப்பின் உயிரினங்கள் சம நிலையை இழந்து நடமாட முடியாது தடுமாறும் நிலை ஏற்படும். நாற்கால் பிராணிகள் நடக்கும் போது முன் வலதும் பின் இடதுமாக இயங்குவதையும் அதுவே மிகப் பொருத்தமான இயக்க முறை என்பதையும் நாம் உணரலாம்.
மிருகங்கள் மனிதனுக்குக் கீழ்படிதல்
ஒரு கழுதை எவ்வாறு சுமைகளை சுமக்க இசைகின்றது? குதிரைகள் அவ்வாறான வேலைகள் கொடுக்கப் படுவதில்லை என்பதையும் அதிக நேரம் ஓய்வாக விடப்படுகின்றன என்பதையும் கழுதைகள் கண்கூடாகக் காண்கின்றன . இருப்பினும் அவை தமக்குத் தரப்படும் இழிவான வேலைகளை மறுப்பதில்லை. பெரிய ஒட்டகம் ஒன்ற சிறுவன் ஒருவனால் கட்டுப் படுத்தப் படுவதை நாம் காண்கிறோம். ஆனால் அது சண்டித்தனம் செய்தால் பல பலம் வாய்ந்த பெரியவர்களாலும் அதை அடக்க முடிவதில்லை.
இதே போல் பலமான எருது ஒன்று பலயீனமான மனிதனின் கட்டளைக்குக் கீழ்ப் படிந்து ஒரு குச்சியின் அல்லது கயிற்றின் கட்டுப்பாட்டில் வயலில் கடுமையாக வேலை செய்கிறது. ஒரு தனி மனிதன் நூற்றுக் கணக்கான ஆடுகளை மேய்ப்பது எவ்வளவு அதிசயமானது. ஒரு அங்குசத்தால் பிரமாண்டமான யானை ஒன்று எவ்வாறு கட்டுப் படுத்தப் படுகிறது. இத பலவித பயங்கர மிருகங்கள் விடயத்திலும் சாத்தியமாவதைக் காணலாம். இது எவ்வாறு சாத்தியமாகிறது? பலம் வாய்ந்த பயங்கர மிருகங்களை மனிதனுக்குக் கட்டுப் படச் செய்தவன் யார்? அவற்றுக்கு மனிதனுடன் போட்டியிடும் அறிவையோ மனிதனுடன் தங்களது பலத்தையும் பிரமாண்டத்தையும் முன் வைத்து அவற்றுக்கு லாபகரமாக அமையக் கூடிய வகையில் ஒப்பந்தங்கள் செய்த ஏன் இயங்க முடியவில்லை?
ஆனால் பலத்தையும் பிரமாண்டத்தையும் அவற்றுக்குக் கொடுத்த அந்த சக்தி அவை மனிதனுக்கு வழிபடக் கூடியதாகவே ஆக்கியுள்ளது. அதுவே இர சாராருக்கும் பயனளிக்கக் கூடியது. அவை மனிதனுக்கு பயப்படுவதே உலக இயக்கத்திற்கு மிகப் பொருத்தமான முறையாகும்.
நாய்களின் தன்மை
நாய் மிருகங்களிலேயே மனிதனுக்கு மிகவும் நன்றி விசுவாசமுள்ள, அவனை அண்டி வாழக் கூடிய, அவனுக்கு துணையும் பாதுகாப்பும் கொடுக்கக் கூடியதாக இருப்பதைக்; கவனித்தீரா? தனது எஜமானையும் அவனது பொருட்களையும் பாதுகாக்க அது தனது உயிரையும் கொடுக்க தயாராக உள்ளது. நாயை இந்த குணாதிசயத்துடன் படைத்தது யார்? அல்லது எது? திருடனையும் எஜமானின் எதிரிகளையும் மிரட்டும் அதன் கூரிய பற்களும் நகங்களும் குரைப்பும் எஜமானின் பக்கம் திருப்பப் படுவதை தடுத்தவன் யார்? இவ்வாறு நாயின் தன்மை இருப்பது மனிதனுக்கு எவ்வளவு அநுகூலமாக உள்ளது.
மிருகங்களின் வடிவமைப்பு
முபழ்ழலே! நாற்கால் பிராணிகளின் முக வடிவத்தைப் பார்த்தீரா? அவற்றின் கண்கள் அமைக்கப் பட்டிருக்கும் விதம் மனிதனுடையதைப் போன்றல்லாது இரு புறத்திலும் உள்ளதால் அவற்றுக்கு கீழே உள்ளதை உண்ணவும் பருகவும் எளிதாக உள்ளது. மனிதன் தனது உணவை வாயினால் நேரடியாக உண்பதில்லை. கைகளினாலேயே வாயினுள் கொண்டு செல்கிறான். மிருகங்களுக்கு அவற்றின் உதடுகள் நீட்டக் கூடியதாக இருப்பதும் அவை உணவை கைகளினால் பற்ற முடியாத காரணத்தினாலேயே ஆகும். மிருகங்களுக்குத் தரப்பட்டிருக்கும் வாலின் நோக்கத்தைச் சி;ந்திப்பீராக. முதற்கண் அவற்றின் மர்ம உறுப்புக்களை மறைக்கவும் பாதுகாக்கவும் அது பயன்படுகிறது. பிறகு தொல்லை தரக் கூடிய ஈக்கள் மற்றும் கொசுக்கள் என்பவற்றிடமிருந்து தப்பவும் தூசைத் தட்டி விடவும் வால் துணை செய்கிறது.
யானைக்குத் தரப்பட்டுள்ள தும்பிக்கை எந்தளவு பயனுள்ளது! யாiனின் கழுத்து நீளமாக இல்லாதிருப்பதால் அது ஏனைய கால் நடைகள் போன்று உணவை உற்கொள்ள முடியாது சிரமப்படும். இவ்வாறு அதை வடிவமைத்தவன் ஞானமுள்ள ஒருவனா? அல்லது ஒன்றுமே இல்லாத இயற்கை எனும் சூனியமா?
ஏன் யானையும் நீளமான கழுத்துக் கொடுக்கப் படவில்லை.ஏனெனில் மிகப் பெரும் தலை, காது, தந்தம் முதலானவற்றின் சுமை நீளமான கழுத்தொன்றினால் சுமக்க முடியாதளவு பளுவுள்ளதாகையால் அதன் கழுத்தை பருமனாகவும் குட்டையாகவும் ஆக்கி நீளமான தும்பிக்கை மூலம் அதன் தேவையை ஈடு செய்தவன் மிகவும் ஞானமுள்ளவன், புகழுக்குரியவன். இவற்றுக்கு நேர் எதிராக ஒட்டகச் சிவிங்கியைப் பார்க்கையில் அதற்கு மிக நீளமான கழுத்து தரப்பட்டுள்ளதுடன் அதன் தலை, காது, கொம்பு முதலியன அதன் உடல் அளவுடன் பொருத்தமில்லாதது போல் தோன்றுமளவு மிகச் சிறிதாகத் தரப்பட்டுள்ளது. அவை பெரிதாகவும் பாரமாகவும் ஆகியிருந்தால் அதன் மெலிதான நீண்ட கழுத்து அச் சுமையை சுமக்க முடியாமல் சிரமப் படும். படைப்பாளனின் படைப்பின் விந்தைகளையும் அவனது ஞானத்தையும் இவற்றாலும் உணர்ந்து கொள்ளப் பாக்கியமற்ற சில நஷ்டவாளிகள் ஒட்டகச் சிவிங்கி இரு வேறு இனங்களின் கலப்ப என்று வாதிடுகின்றனர்.
அப்படியாயின் ஒரு ஒட்டகச் சிவிங்கியின் உடலில் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு மிருகத்தினுடையது போலிருக்கிறதே. அதன் தலை குதிரையைப் போன்ற இருக்கிறது. அதன் கழுத்து ஒட்டகத்தைப் போன்று இருக்கிறது. அதன் பாதங்கள் மாட்டினுடையது போன்றும் அதன் மேனி சிறுத்தையைப் போன்றும் இருக்கிறது.
சில அறிவிலிகள் மேற் கூறப்பட்ட பல இனங்கள் ஓரிடத்தில் தண்ணீர் பருக சேகரமாகும் பொழுது அவை உறவு கொண்டு இவ்வாறான பல இலட்சனங்கள் கொண்ட மிருகங்கள் உருவாகின என்று வாதிடுகின்றனர். இத பல விதமான படைப்பினங்களைப் படைக்கும் ஆற்றலுள்ள அல்லாஹ்வின் வல்லமையை உணராத ஊகங்களே ஆகும்.
அப்படியாயின் ஒட்டகச் சிவிங்கியின் தோற்றம் மேற் கூறப்பட்ட பல இனங்களின் கலவை மாறுபட்டு வர வேண்டுமே. உதாரணமாக அதன் கழுத்து எந்த நேரமும் ஒரு ஒட்டகத்தின் கழுத்தைப் போன்றே அமையாமல் சில சமயங்களில் குதிரையின் கழுத்தைப் போன்று வரலாமே. அதன் முகம் மாட்டின் முகத்தைப் போன்று வரலாமே. அப்படியாகாமல் அது உலகம் தோன்றிய நாளிலிருந்து ஒரே விதமாக வந்து கொண்டிருப்பதன் மர்மம் என்ன? அதன் மூலமே ஒட்டகச் சிவிங்கி பல இனங்களின் கலவை அன்றி அதுவும் வல்ல நாயனின் கோடான கோடி சிருஷ்டி வடிவங்களுள் ஒன்றேயாகும் என்பது தெளிவாகின்றது.
அவன் நாடியவாறு அவற்றின் உருவங்களை அமைக்கிறான். அவனது நாட்டத்தை யாராலும் தடுக்கவோ, மறுக்கவோ, குறை கூறி விடவோ முடியாது. குரங்கிற்கும் தனிதனுக்கும் இடையேயுள்ள உருவ ஒற்றுமையைப் பார்ப்போம். மனிதனை அண்டி வாழும் தேவையுள்ள குரங்கு, குதிரை, நாய்,யானை போன்ற மிருகங்களுக்கு ஏனைய மிருகங்களை விட அறிவையும் புரிந்து கொள்ளும் திறனையும் அல்லாஹ் அளித்திருப்பதால் அவை மனிதனுக்குக் கட்டுப்பட்டு பயன் தருகின்றன.
அத்தோடு குரங்கைப் பார்க்கும் மனிதன் தான் எந்தளவு ஒரு மிருக இனத்தை ஒத்த வகையில் படைக்கப் பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து அல்லாஹ் சற்று அதிகமாக ஆறறிவை தமக்குத் தராவிட்டிருந்தால் நாமும் ஒரு மிருகத்தைப் போல மரங்களில் தாவித் திரியும் நிலை ஏற்பட்டிருக்குமே என அஞ்சி நன்றி செலுத்தவும் இது போன்ற மிருக இனங்கள் மனிதனுக்குப் பயனளிக்கின்றன.
முபழ்ழலே! மனிதனைப் போலிருந்தாலும் குரங்கு போன்ற இனங்களுக்கு அல்லாஹ் அளித்திருக்கும் மிகுதியான அடர்த்தியான முடி, அதன் நீண்ட கைகள், கால்கள் என்பன அவற்றுக்கு எவ்வாறு பயனளிக்கின்றன என்பதை கவனித்தீரா? ஆடைகளைத் தயாரிக்;க அறிவு கொடுக்கப் படாத அது போன்ற இனங்கள் குளிர் காலத்தில் தம்மைக் காத்துக் கொள்ளவே இது போன்ற அடர்த்தியான உரோமம் தரப்பட்டுள்ளது.
மனிதனுக்கோ துணி நெய்யும் அறிவையும் அதற்குத் தேவையான கை விரல்களையும் நெசவு இயந்திரங்களை தயாரிக்கும் திறனையும் விதவிதமான வகை ஆடைகளின் தேவைகளையும் அதனை அணிந்து அழகு பார்க்கும் ஆனந்தம் கொள்ளும் தன்மையையும் அந்தஸ்துக்கேற்ற விதத்தில் ஆடை அணியும் மனப்பாங்கையும் அல்லாஹ் தந்துள்ளான்.
இது மட்டுமன்றி இதன் மூலம் உலகில் பலர் தொழில் வாய்ப்புப் பெறுவதும் உழைப்பதும் செல்வம் சேர்ப்பதும் இலாபம் அடைவதுமாக பல தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. இந்த வசதியும் அறிவும் தரப்படாத உயிரினங்களின் உரோமம் அவற்றின் நிரந்தர உடையாகவும் அதன் பாதங்கள் காலணிகளாகவும் பயன்படுகின்றன.
மரண சமயத்தில் மிருகங்கள்
'மிருகங்கள் இறக்கும் சமயம் அவை மனிதனின் கண் காணாத இடத்துக்கு செல்வதை முபழ்ழலே! நீர் சிந்தித்தீரா? அவை உண்மையில் மனிதனை விட எண்ணிக்கையில் அதிகமாக இருப்பினும் இந்த விடயத்தை மறைவாக செய்து கொள்ள அவை தவறுவதில்லை. இது எவ்வாறு சாத்தியமாகிறது?
மனிதனை விட அறிவால் தாழ்ந்த இந்த ஐயறிவு உயிரினம் இந்;த விடயத்தில் எவ்வாறு திறமையாக செயல்படுகின்றது? சிங்கம், சிறுத்தை, யானை, குதிரை, கழுதை, நாய், பூனை, ஓநாய், ஆடு, மாடு, குரங்கு, வரிக்குதிரை, ஒட்டகச் சிவிங்கி, புலி, கரடி என எண்ணிலடங்காத இந்த மிருக இனங்களின் இறுதிக் கிரியைகள் எங்கு, எப்போது, எவ்வாறு நடைபெறுகின்றன?
இது தவிர பறவை,மீன் இனங்களின் வகைகளின் எண்ணிக்கையை யாரால் கணக்கிட முடியும்?; இவற்றின் இறுதி நாட்கள் எவ்வாறு நடைபெறுகின்றன? இவை அனைத்தும் அனுதினமும் மரணமடைந்தவாறு இருப்பது நிச்சயம். ஆனால் அவற்றின் பிணங்கள் எங்கே? எவ்வளவு நுட்பமாக மனி;த மிருக இரு உலகங்களின் இறுதிச் சடங்குகள் பிரிக்கப் பட்டுள்ளன.அறிவில் உயர்ந்த மன்தனால் கூட இதை இரகசியமாக செய்ய முடிதில்லையே!
ஆரம்ப மனிதர்களான ஆபில் காபில் இருவரும் சண்டையிட்டு ஒருவரை மற்றவர் கொலை செய்து உயிரற்ற உடலை என்ன செய்வது என்று குழம்பிய சமயத்தில் ஒரு காகமே பிணத்தை புதைப்பது பற்றிய முறையை காட்டிக் கொடுத்ததென்பதை நாம் சரித்திரம் மூரம் அறிகிறோம்.
மிருகங்களின் மதிநுட்பம்
ஆறறிவு கொடுக்கப் படாவிட்டாலும் மிருகங்களுக்கு சில விடயங்களில் கொடுத்திருக்கும் நுட்பங்களைக் கவனித்தீரா? அந்த நுட்பம் மனிதனுக்கு கொடுக்கப்படவில்லை. அவற்றைப் பார்த்து மனிதனும் வியப்படைகிறான். இதன் மூலம் அல்லாஹ் தான் சகல படைப்பினங்களுக்கும் நியாயமாகப் பங்கீடு செய்வதை நிரூபிக்கிறான்.
ஊதாரணமாக ஆண் கலைமான் சில சமயம் பாம்பை உண்டால் உடனே தண்ணீர் அருந்துவதில்லை. அது ஆற்றோரத்தில் இருப்பினும் தாகத்தின் வேட்கையை தாழ முடியாமல் தண்ணீர் தொட்டியின் அருகில் கதறியபடி இருந்தாலும் தண்ணீரை உடனே அருந்தாது. ஊண்ட பாம்பின் விஷம் தண்ணீர் அருந்துவதால் வேகமாக உடலெங்கும் பரவி அத மரணமடைந்து விடும் என்பதனாலேதான்.
தாகத்தை கதறியபடியே தாங்கி தனது உயிரைக் காத்துக் கொள்ளும் அறிவு ஒரு கலைமானுக்கு இருப்பினும் மனிதன் இது விடயத்தில் பொறமை இழந்து தாகத்துக்கு அடிமையாகி உயிரிழப்பது நிச்சயம். கடலில் தத்தளிக்கும் மனிதர் பலர் தாகத்தை தாழ முடியாமல் உப்பு நீரை அருந்தி மரணம் அடைந்த சம்பவங்கள் பல உள்ளன.
நரி தனக்கு உணவு கிடைக்காத போது தனது வயிற்றை உப்ப வைத்து தான் செத்து பிணமாகியிருப்பது போல பாவனை செய்யும். பிணம் திண்ணிப் பறவைகள் அதை நெருங்கி வரும் போது உடனே அவற்றைத் தாவிப்பிடித்து இரையாக்கிக் கொள்ளும்.
மனிதனால் சுவைத்துப் பார்த்தே வித்தியாசம் அறியப்படும் உப்பு சீனி போன்ற வஸ்துகளை சுவைத்துப் பார்க்காமலே எறும்பு, ஈ போன்ற சிறிய உயிரினங்கள் இனங்காணுவதை நாம் காண்கிறோம்.
வாய் பேச முடியாத இந்த உயிரினங்களுக்கு மனிதனுக்குத் தரப்படாத சில அரிய நுட்பங்கள் தரப்பட்டிருக்கின்றனவே. இவற்றை யார் கொடுத்தது? சிறிய உடலமைப்புக் கொண்ட நரி தனது இரையைப் பெற்றுக் கொள்ள தனது ஏமாற்றும் அறிவைப் பயன்படுத்துகின்றது.விஷம் உட்கொண்டால் வைத்தியரிடம் போக முடியாத கலைமானுக்கு தற்காப்பு அறிவையும் அதிக பொறுமையையும் அல்லாஹ் கொடுத்திருக்கிறான். உப்பு எது? சீனி எது? என்று அறிய அங்கும் இங்கும் அலைய முடியாத சிறு பிராணிகளுக்கு தொலைவில் இருந்தே அறிந்து கொள்ளும் அறிவை அல்லாஹ் கொடுத்துள்ளான்.
அதிலும் சீனியிலோ உப்பிலோ எந்த வாசனையும் வெளியாவதில்லை என்பதை நினைக்கும் போது அல்லாஹ் எறும்பு, ஈ போன்ற சிறிய உயிரினங்களுக்கு தந்திருக்கும் அறிவு நுட்பம் எப்படிப் பட்டதென்றே நம்மால் சிந்திக்க முடிவதில்லை. குறிப்பாக எறும்புகள் உணவை சேகரிக்க சுமந்து செல்லும் ஒழுங்கைப் பார்த்தீரா? பெபரிய உணவு வகைகளை உடைத்து சிறிதாக்கி வரிசையாக நின்று சுமந்து செல்வதும் அவற்றை உயரமான இடத்தில் களஞ்சியப் படுத்தி வெள்ளம் போன்ற அபாயங்களிலிருந்தும் பாதுகாப்பதையும் கவனித்தீரா? அவற்றின் உணவு தானியங்கள் நனைந்து ஈரமாகிவிட்டால் அதை வெளியில் எடுத்து வெயிலில் உலர்த்துவது பற்றியும் சிந்தித்தீரா? இவை அனைத்திலும் ஒரு நோக்கம், ஒழுங்கு மற்றும் தெளிவு இருப்பதை நாம் உணரலாம்.
இந்த அறிவும் திறமையும் மிகுந்த ஞானத்தின் ஊற்றின் மூலமே அன்றி இந்த சிறு ஜந்துகளுக்கு வேறு எங்கிருந்த கிடைக்கும்?
வாய் பேச முடியாத, படிப்பறிவில்லாத, ஆடை அணியும் நாகரீகம் தரப்படாத கலைமானுக்கும் ஈ, எறும்புக்கும் பலவித அதிசய நுட்பங்கள் தரப்பட்டிருப்பது யாரால்? பறவைகளை உணவாகக் கொள்ளும் டொல்பின் இனத்தை சேர்ந்த ஒரு வகை மீன் அதற்கான கச்சிதமான உடலமைப்பு தனக்கு இல்லாத படியால் சிறு மீன்களைக் கொன்று அவற்றை தண்ணீரில் மிதக்க விடும். ஆந்த மீன்களைக் கொத்த தாழ்ந்து வரும் சிறு பறவைகளை தண்ணீரில் மறைந்திருந்து பிடித்து உண்கிறது.
சிலந்தி தனது உணவைப் பிடிக்க எந்தளவு பாரிய திட்மொன்றை தீட்டுகிறது.மிக நேர்த்தியான வலை ஒன்றைப் பிண்ணி அதன் மத்தியில் பொறுமையுடன் காத்திருந்து பூச்சிகளைப் பிடித்து உண்ணுகிறது. பறக்க முடியாத வேகமாக ஓட முடியாத அது பறக்கக் கூடிய பூச்சிகளை எவ்வளவு திறமையாக சிக்க வைத்துப் பிடித்துக் கொள்கிறது. இந்த அறிவு அதற்கு அதனைப் படைத்தவனிடம் இருந்தேயன்றி எவ்வாறு கிடைத்தது? வேகமும் விவேகமும் உள்ள மனிதனால் கூட முடியாத சில செய்கைகளை அற்ப உயிரினங்கள் செய்வதன் மூலம் அல்லாஹ் நமக்கு சிறந்ததொரு படிப்பினையையும் அத்தாட்சியையும் வைத்துள்ளான்.
பறவைகள்
முபழ்ழலே! பறவைகளின் அமைப்பை நோக்குவீராக! அவை பறக்கும் தேவை உடையவை. ஆகையால் அவற்றின் உடல் அதிக எடை அற்றதாக வடிவமைக்கப் பட்டுள்ளது. கால்கள் இரண்டு மாத்திரமே தரப்பட்டுள்ளதுடன் விரல்கள் நான்கு வீதமே தரப்பட்டுள்ளன. அதன் நெஞ்சு காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லக் கூடிய விதத்தில் அமைக்கப் பட்டுள்ளது. வாய்க்குப் பதிலாக சொண்டும் பறப்பதற்கு இசைவாக கூரிய முனையுடன் தரப்பட்டுள்ளது. பறக்க ஏதுவாக வாயும் பற்கள் அற்றதாக காற்று உற்புகுந்து வெளியாகும் விதத்தில் அமைக்கப் பட்டுள்ளது. உணவை நன்றாக அரைக்க பற்கள் தரப்படாததால் பறவைகளின் உடலில் அதிக உஷ்ணம் கொடுக்கப் பட்டுள்ளதோடு உணவு ஜீரணிக்க அந்த அதிக உஷ்ணம் துணை செய்கிறது.
அவற்றின் இன விருத்தியும் குட்டி போடுவதற்குப் பதிலாக முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் முறையில் நடைபெறுகிறது. இதனால் தாய்மை அடைந்த பறைவைகள் தமது முட்டையினைப் பாதுகாப்புடன் வைத்து விட்டு பறந்து செல்வது சாத்தியமாகிறது. ஆனால் அவை தமது முட்டைகள் மீது சில நாட்கள் அமர்ந்து அடைகாப்பதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். குஞ்சுகள் வெளியே வந்தவுடன் அவற்றை அதன் தாய் காப்பதிலும் படைத்தவனின் வல்லமை புலனாகின்றது. குழந்தைகளின் இரைப்பைக்குள் காற்றை ஊதிய பிறகே தமது இரைப்பையில் உற்கொண்ட பாதி ஜீரணமாகிய உணவை வெளியே எடுத்து ஊட்டுகிறது.
மனிதன் தனது பிள்ளைகளிடமிருந்து வயோதிப காலத்தில் எதிர்பார்க்கும் எந்த உதிவியையும் எதிர்பார்க்காமலேயே இப்பறவைகள் மேற்கூறிய விதத்தில் குஞ்சுகளை அடைகாத்து பாதுகாத்து உணவளித்து வளர்க்கின்றன. இதை அவை எவ்வாறு செய்கின்றன? இதில் உள்ள ஒழுங்கை முடிவு செய்தவன் யார்?
கோழிக் குஞ்சுகள் பெரிதானதும் தமது தாய் தந்தையை பராமரித்து பாதுகாப்பதுண்டா? இல்லையே! அப்படியிருந்தும் தாய்க் கோழி குஞ்சுகளை எவ்வளவு அக்கறையுடன் உணவளித்து பாதுகாத்து வளர்க்கிறது. இதனால் அதற்கு என்ன பயன்? அல்லது என்ன இலாபம்? முட்டைகளை அடைகாக்கும் நாட்களில் கோழி எவ்வளவு பொறுமையுடனும் கவனத்துடனும் நடந்து கொள்கிறது. இதெல்லாம் ஏன்? அந்த இனம் உலகம் உள்ளவரை உலகில் நிலை பெற வேண்டியதற்காக வல்ல நாயன் திட்டமிட்டதனாலேயே இவ்வாறு நடக்கிறது.
இது தவிர முட்டையின் வடிவமைப்பையும் அதன் செயல் திறனையும் பற்றி சிந்திப்பீராக. மனிதனின் கருவில் வளரும் பிள்ளைக்கு தொப்புள் கொடி மூலம் தேவையான ஊட்டங்கள் அனுப்பப்பட குழந்தை வளர்கிறது. ஆனால் முட்டைக்குள் வெளியில் இருந்து அவ்வாறு எதுவும் செல்வதில்லை.கோழியின் உஷ்ணம் மட்டுமே வெளிப்புறத்தில் கிடைக்கிறது. ஆகையால் அல்லாஹ் அந்த குஞ்சுவின் வளர்ச்சிக்காக செய்திருக்கும் வியத்தகு ஏற்பாட்டைப் பார்த்தீரா? மஞ்சள் கரு வெள்ளைக்கரு இரண்டு மாத்திரம் முட்டைக்குள் வைக்கப் பட்டுள்ளன. மஞ்சள் கரு கோழிக் குஞ்சுவின் உருவ அமைப்பை ஏற்படுத்த வெள்ளைக் கரு சுமார் 22 நாட்கள் வரை அந்த மஞ்சள் கருவிற்குத் தேவையான ஊட்டங்களையும் உணவையும் செலுத்தி வருகிறது.
இந்த நெருக்கடியான முட்டையின் அறைக்குள் இந்த மகத்தான செயற்பாடு நடை பெறுகிறது. வெளியில் இருந்து எதுவும் செல்ல முடியாத ஓட்டையும் தாண்டி குஞ்சு உயிர் பெறுகிறது. இரு நிற பிசு பிசுப்பான திரவங்கள் உயிரோட்டமுள்ள அழகிய ஜீவன் ஒன்றை தயாரித்தளிக்கின்றன. இது அறிவும் ஆற்றலும் இல்லாத ஒன்றினால் நடைபெறுமா?
முபழ்ழலே! பறவைகளின் குறிப்பாக மயிலின் தோகையிலுள்ள கண் கவர் வர்ணங்களின் கவர்ச்சியைப் பாரும். அது எந்தளவு திறமையாக ஒரு தலை சிறந்த ஓவியன் தூரிகையை கவனமாகப் பயன்படுத்தியது போல கலை வண்ணமாகத் திகழ்கிறது. அதன் இரு புற இறகுகளும் ஒரே விதமாக வர்ண அலங்காரங்களால் மெருகூட்டப் பட்டுள்ளன. இது அறிவும் நுட்பமும் இல்லாமல் சாத்தியமாகுமா? பிறக்கக் கூடிய மயில்கள் அனைத்தும் இதே போன்ற வர்ண ஜாலங்களுடன் உலகிற்கு தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளதன் அதிசயம், இரகசியம் என்ன?
பறவைகளின் சிறகுகள் எவ்வாறு அமைக்கப் பட்டுள்ளன எனப் பார்த்தீரா? அவை மிக நேர்த்தியாக நெய்யப்பட்ட துணியைப் போன்று உள்ளன. அத்துடன் பறவை பறப்பதற்கு மிகப் பொருத்தமான விதத்தில் அவை உருவாக்கப் பட்டுள்ளன. நீளமான கால்கள் கொண்ட கொக்கு போன்ற பறவைகளைப் பார்த்தீரா? அது தண்ணீரில் நின்ற வண்ணம் ஏதாவது அசைவு நீரில் தெரிகின்றதா? என கண்காணித்த வண்ணம் உள்ளது. ஏதும் தெரிந்தவுடன் அந்த இடத்தை நோக்கி மெதுவாக நடந்து செல்கிறது. தனது இரையைப் பிடித்து உண்கிறது. அதன் கால்கள் நீண்டு மெலிந்து இருப்பதால் அது இரையை நோக்கி நடக்கும் போது சலனம் ஏற்படுவதில்லை. மாறாக ஏனைய பறவைகளைப் போன்று அதன் கால்கள் குட்டையாக இருப்பின் அதன் வயிறு தண்ணீரில் பட்டு சலசலப்பு ஏற்படுவதால் இரை ஓடிவிடும்.
இதே போல் நீண்ட காலுள்ள பறவைகளின் கழுத்தும் நீண்டதாக இருப்பதை காணலாம். இல்லாவிட்டால் அது இரையைக் கொத்தி திண்ண சிரமப்படும். நீண்ட கழுத்துள்ள பறவைக்கு குட்டையான கால்களோ, நீண்ட கால்களுள்ள பறவைக்கு குட்டையான கால்களோ தரப்படாததன் நுட்பத்தைப் பார்த்தீரா? படைப்பில் இவ்வாறான நேர்த்தியும் கச்சிதமும் தொடர்ந்து வரும் அழகைப் பார்க்கையில் இவற்றின் சிருஷ்டி கர்த்தாவின் கை வண்ணம் மிளிர்கிறது.
மனிதனைத் தவிர உள்ள ஏனைய உயிரினங்கள் பல அப்போதைக்குத் தேவையான உணவையே தேடுகின்றன. தேனீ, எறும்பு தவிரவுள்ள எல்லா ஜீவராசிகளும் எந்த வித சேமிப்பும் இன்றி உணவைத் தேடி அலைவதும் அப்போதைய தேவை முடிந்தவுடன் ஓய்வு பெறுவதும் உண்டு. ஆனால் அவை ஒரு போதும் பசியினால் அழிவதில்லை.
முபழ்ழலே! கோட்டான், வெளவால் போன்ற சில பறவைகளின் இவை இரவு நேரத்திலே மாத்திரம் வெளிப்படுகின்றன. இப்பறவைகளும் இரை தேடும் நேரமாக இரவையே பயன்படுத்துகின்றன. விட்டில் பூச்சிகள் இருக்கும் இடம் தெரியாவிட்டாலும் ஒரு விளக்கு ஏற்றப் பட்டவுடன் அதை நோக்கி கூட்டமாக வருவதைக் காணலாம். அது வரை அந்தக் கூட்டம் எங்கு இருந்தது என்பதை யாராலும் அறிய முடிவதில்லை.
வெளவால்கள்
இது சிருஷ்டி கர்த்தாவின் மேலும் ஒரு விந்தையான கற்பனையாகும். அது பறவை மற்றும் நாற் கால் பிராணி இரண்டினதும் கலவை போன்றிருக்கிறது.