புதன், 9 டிசம்பர், 2009

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் ஹாமெனெயீ அவர்களின் செய்திகள்

01.தலைவரின் ஹஜ் செய்தி
அருளாளனும் அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்...
ஹஜ் பருவ காலம் ஆன்மீகப் புத்துயிரிற்கும், உலகின் அடிவானத்தில் ஏகத்துவத்தின் பிரகாசம் ஒளிர்வதற்குமான நேரமாகும். அதன் கிரியைகள் ஒரு தூய்மையான நீரூற்றுப் போன்றதாகும். ஹஜ் செய்பவர் அதில் தமது பாவங்களினதும் அலட்சியத்தினதும் அசூசைகளைக் கழுவித் தூய்மைப்படுத்திக் கொள்ளவும், இறைவன் வழங்கிய இயல்புகளின் ஜோதியை தன் இதயத்திலும் உள்ளுணர்விலும் மீளவைக்கவும் அது சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.
ஹாஜிகள் தமது பெருமையினதும் வேறுபாட்டினதும் ஆடைகளைக் களைந்து விட்டு, அனைவருக்கும் பொதுவான வெள்ளை நிற இஹ்ராம் அணியும் செயல், உலக முஸ்லிம் உம்மாஹ்வின் வேறுபாடுகள் அற்ற சர்வதேச தனித்துவத்தை எடுத்தியம்புகின்றது. அத்துடன், உலகெங்கும் வாழுகின்ற முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமையும் பரஸ்பர அன்பும் நிலவ விடுக்கும் அழைப்பையும் பிரதிபலிக்கின்றது.
'உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான். அவனிடமே சரணடையுங்கள். பணிவுடையோருக்கு நற்செய்தி சொல்லுங்கள்' (சூரா ஹஜ்:34) என ஒரு புறத்தில் ஹஜ் அழைப்பு விடுக்கின்றது. மறுபுறத்தில், 'புனித இறையில்லத்தை நாம் உள்ளூர்வாசிகளுக்கும் வெளியூர்வாசிகளுக்கும் சமமான நிலையில் முழு மனித சமுதாயத்துக்குமாக ஆக்கியிருக்கிறோம்' (சூரா ஹஜ்:25) என அழைக்கின்றது. இவ்வகையில், கஃபாவானது தவ்ஹீத் எனப்படும் ஏகத்துவத்தின் சின்னமாக இருப்பது போல், முஸ்லிம்கள் மத்தியில் ஐக்கியம், சகோதரத்துவம் மற்றும் சமத்துவம் என்பனவற்றுக்கான அழைப்பையும் பிரதிபலிக்கின்றது.
உலகின் நாலா பக்கங்களிலிருந்தும் இறையில்லத்தை வலம் வந்து இறைத்தூதரைத் தரிசித்துச் செல்ல வேண்டுமென்ற ஆவல் பொங்க வந்த இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஹஜ்ஜில் ஒன்றுகூடி உள்ளனர். இவர்கள் தம் மத்தியிலான சகோதர இணைப்புக்களைப் பலப்படுத்திக் கொள்வதற்காக இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், அது முஸ்லிம் சமுதாயம் எதிர்நோக்கியுள்ள ஏராளமான வலிகளுக்கு ஒத்தடமாக அமையும்.
முன்னெப்போதையும் விடப் பெருமளவு, இஸ்லாமிய உலகின் மீது ஆவேசம் கொண்டுள்ள பல்வேறு சக்திகள் தற்போது முஸ்லிம்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் வேகமாகச் செயலாற்றுவதை பகிரங்கமாகக் காண்கின்றோம். ஆகவே, முஸ்லிம் உம்மாஹ் ஐக்கியத்தோடும் ஒத்துழைப்போடும் வாழ வேண்டிய தேவை முன்னரை விட அதிகமாக உணரப்படுகின்றது.
துரதிஷ;டவசமாக, இன்று எதிரியின் இரத்தம் தோய்ந்த கைகள் முஸ்லிம் உலகை மிகக் கொடூரமாக இறுக்கிப் பிடித்துள்ளன. பலஸ்தீன மக்கள் சியோனிச ஆக்கிரமிப்பில் நாளுக்கு நாள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவிக்கின்றனர். மஸ்ஜிதுல் அக்ஸா பயங்கரமான ஓர் ஆபத்தில் தள்ளப்பட்டிருக்கின்றது. காஸாவில் நடைபெற்ற சோகமயமான இன ஒழிப்புக்குப் பிறகு மக்கள் தொடர்ந்தும் மிகக் கொடுமையான அடக்குமுறையை அனுபவித்து வருகின்றனர். ஆக்கிரமிப்பாளரின் கால்களின் கீழ் சிக்குண்டுள்ள ஆப்கானிஸ்தானில் ஒவ்வொரு நாளும் புதியதொரு விபரீதம் நடக்கிறது. ஈராக்கில் உள்ள பாதுகாப்பற்ற சூழல் அம்மக்களது அமைதியான வாழ்வையும் நிம்மதியையும் பறித்துள்ளது. யெமனில் நடைபெறுகின்ற சொந்த சகோதரர்களையே அழித்தொழிக்கும் நிகழ்வு மேலதிகமாக இஸ்லாமிய உம்மாஹ்வின் இதயத்தில் புதியதொரு வலியை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கடந்த சில ஆண்டுகளாக அரங்கேற்றப்பட்டு வருகின்ற கலகங்கள், போர்கள், குண்டுவெடிப்புகள் பயங்கரவாத செயற்பாடுகள், குருட்டுத்தனமான மனிதப் படுகொலைகள் என்பன எங்கு எவ்வாறு திட்டமிடப்படுகின்றன என்பதை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும். அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளின் படைகள் அதிகார பூர்வமாக சொந்த வீட்டில் நுழைவது போல் இப்பிராந்தியத்தில் நுழைவதற்கு முன்னர் இத்தகைய துன்பங்கள் அங்கு இடம்பெறவில்லையே, அது ஏன்?
ஒரு புறத்தில் மக்கள் எழுச்சிகளையும் உரிமைப் போராட்டங்களையும் பலஸ்தீன், லெபனான் போன்ற நாடுகளில் பயங்கரவாதம் என வர்ணிக்கின்றன அதே ஆக்கிரமிப்பாளர்கள்தான், இப்பிராந்திய மக்கள் மத்தியில் இனவாத, பிரிவினைவாத பயங்கரவாதத்தையும் திட்டமிட்டு அரங்கேற்றி வருகின்றன.
ஒரு நூற்றாண்டுக்கு மேலாக மத்திய கிழக்கு மற்றும் வடஆபிரிக்கப் பிராந்தியம் என்பன பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற மேற்கு நாடுகளின் ஏகாதிபத்தியத்தின் கீழும் பின்னர் அமெரிக்க ஆதிகத்தின் கீழும் அடிமைப்படுத்தப்பட்டு இழிவுபடுத்தப்பட்டன. அவற்றின் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டன. அவர்களது சுதந்திர உணர்வுகள் துவம்சம் செய்யப்பட்டன. அந்நிய ஆக்கிரமிப்பாளர்களின் பேராசைகளுக்கு இந்த சமுதாயங்கள் பணயமாகின.
ஆயினும், இந்த சமூகங்களிடையே உருவாகிய எதிர்ப்புப் போராட்டங்களும் இஸ்லாமிய எழுச்சியும் இந்நிலையைத் தொடர விடாமல் உலகளாவிய ஏகாதிபத்தியங்களைத் தடுத்து நிறுத்தின. உயிர்த்தியாகம், இறைவனை அடைவதற்கான போராட்டம் முதலிய பரிமாணங்கள் இஸ்லாமியப் போராட்ட வடிவங்களில் தோற்றம் பெற்றன. இவற்றை எதிர்கொள்ளும் சக்தியற்ற ஆக்கிரமிப்பாளர்கள் வேறுவிதமான ஏமாற்று வித்தைகளைக் கைக்கொண்டு பழைய ஏகாதிபத்தியத்துக்குப் பதிலாக புதியதொரு வடிவில் தம் ஆக்கிரமிப்பைத் தொடர முனைந்தனர்.
இஸ்லாம் தலைகுனிய வேண்டும் என்பதற்காக ஏகாதிபத்தியவாதம் தன் அத்தனை சக்திகளையும் களமிறக்கியுள்ளது. இராணுவப் பலம் முதற்கொண்டு, பகிரங்க ஆக்கிரமிப்பு, தீய பிரசார யுத்தம், பொய்களையும் வாந்திகளையும் பரப்புகின்ற ஊடக நிறுவனங்கள், ஆக்கிரமிப்புக்கு வழியமைக்கும் விதத்தில் குழுக்களை பலப்படுத்தி மோதவிடுவது, மனிதப் படுகொலைகளை அரங்கேற்றுவது, இளைஞர்களது மனவுறுதி, திடநம்பிக்கை, ஒழுக்கம் என்பனவற்றை அழித்தொழித்தல், ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளும் இயக்கங்களுக்கெதிரான அரசியல் ரீதியான நெருக்கடிகளைத் தோற்றுவித்தல், இனரீதியான முரண்பாடுகளையும் பகைமையாக மாற்றுவது என முடிந்த எல்லாவித உத்திகளையும் ஏகாதிபத்தியம் பிரயோகிக்கின்றது.
எதிரிகள் விரும்புகின்றவாறான தப்பெண்ணம், தீயநோக்கு என்பவற்றுக்குப் பகரமாக முஸ்லிம் சமுதாயங்கள், குழுக்கள், மற்றும் இனங்கள் மத்தியில் பரஸ்பர அன்பு, நல்லெண்ணம், ஒத்துழைப்பு என்பன இடம்பிடிக்குமெனில், துஷ;ட எண்ணம் கொண்டோரின் திட்டங்களிலும் சதிகளிலும் பெரும்பான்மையானவை தோல்வியடைந்து விடும். முஸ்லிம் உம்மாஹ்வைக் காவுகொள்ள நாளாந்தம் தீட்டுகின்ற திட்டங்கள் செயலிழந்து விடும். இந்த உயரிய நோக்கை அடைந்து கொள்வதற்கான மிகச் சிறந்த சந்தர்ப்பம் ஹஜ் கிரியையாகும்.
முஸ்லிம்கள் பன்முகம் கொண்ட ஏகாதிபத்திய அரக்கனை வெல்வதற்கு, தமது பொதுவான அடிப்படைகளை வழங்கும் குர்ஆன் மற்றும் நபிவழியின் வழிநின்று பரஸ்பர ஒத்துழைப்பும் நல்லிணக்கமும் கொள்ள வேண்டும். பெருந்தலைவர் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் அடியொற்றிப் போராடிய ஈரானிய சமுதாயம் இப்போராட்டத்தின் வெற்றிக்குச் சிறந்த உதாரணமாக விளங்குகின்றது. ஈரானில் அத்தகைய சக்திகள் தோல்வியையே கண்டன.
முப்பது ஆண்டுகளாகத் தீட்டிய சதித்திட்டங்கள் - இராணுவச் சதி மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி, எட்டு ஆண்டுகால திணிக்கப்பட்ட யுத்தம், பொருளாதாரத்தடை, உடைமைகள் கபளீகரம், உளவியல் ரீதியான போர், ஊடகப் படையெடுப்பு முதற்கொண்டு அறிவு, விஞ்ஞானத் துறைகளில் அபிவிருத்திக்குத் தடையேற்படுத்தல், அணுசக்தி ஆய்வை ஈரானிய நிபுணர்கள் மேற்கொள்வதை எதிர்த்தல், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலின் போது அப்பட்டமாக அரங்கேற்றிய ஆத்திரமூட்டல்களும் தலையீடுகளும் என அத்தனை செயற்பாடுகளும் எதிரிகளுக்குத் தோல்வியையும் குழப்பத்தையும் தந்ததுடன், 'iஷத்தானின் சதிகள் எப்போதும் பலவீனமானவை' (சூரா நிஸா: 76) என்ற அல்குர்ஆன் வசனத்தை மீண்டும் ஒரு முறை ஈரானிய மக்களின் கண்முன் யதார்த்தபூர்வமாகக் காட்டியுள்ளது.
ஈமானிய உறுதியோடு பேராதிக்க சக்திகளுக்கெதிராக உலகின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்கள் மேற்கொண்ட எழுச்சிப் போராட்டங்களும் அம்மக்களுக்கு வெற்றியையும் எதிரிக்கு ஏமாற்றத்தையும் தோல்வியையுமே தந்தன. கடந்த மூன்று வருடங்களுக்குள் நடந்த லெபனான் மக்களது 33 நாள் வெற்றியும் காஸா மக்களின் பொறுமையான போராட்ட வெற்றியும் இந்த உண்மையை நிரூபிக்கும் உயிருள்ள சான்றுகளாகும்.
பொதுவாக, ஹஜ் பாக்கியத்தை அடைந்த எல்லா ஹாஜிகளுக்கும் குறிப்பாக இந்த தெய்வீக நிகழ்வில் பங்கேற்றுள்ள இஸ்லாமிய நாடுகளின் பிரசாரகர்கள், குத்பா நிகழ்த்துனர்கள் மற்றும் இரண்டு ஹரம்களினதும் குத்பா இமாம்கள் எல்லோருக்கும் நான் வழங்குகின்ற உறுதியான ஆலோசனை இதுதான். தயவு செய்து நீங்கள் உங்களது நிகழ்காலப் பணியைச் சரியாக இனங்காணுங்கள். உங்கள் மக்களுக்கு இஸ்லாத்தின் எதிரிகளின் சதித்திட்டங்களை விளக்கிக் காட்டுங்கள். முஸ்லிம்களை பரஸ்பர அன்பு மற்றும் ஒற்றுமையின் பால் அழையுங்கள். முஸ்லிம்கள் மத்தியில் அவநம்பிக்கையை அதிருப்தியை ஏற்படுத்தும் எல்லா விடயங்களையும் தவிர்ந்து கொள்ளுங்கள். எல்லாவித எதிர்ப்பு அலைகளையும் உணர்வுகளையும் இஸ்லாமிய சமுதாயத்தின் எதிரிகளுக்கு எதிரானதாக, குறிப்பாக அமெரிக்காவுக்கும் சியோனிசத்துக்கும் எதிரானதாக நெறிப்படுத்துங்கள். இதன் மூலமாக, இணைவைப்பாளர்களிடமிருந்து விலகி நிற்கும் பிரகடனத்தை உண்மைப்படுத்த முனையுங்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவனது வழிகாட்டல், அங்கீகாரம், நுட்பம், அருள் என்பனவற்றை உங்களுக்கும் எனக்கும் தந்தருள வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்.
வஸ்ஸலாமு அலைக்கும்


02.ஆயத்துல்லாஹ் முன்தசரி அவர்களின் மரணத்திற்கு ஆன்மீகத் தலைவர் அனுதாபம்


ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யித் அலி காமெனயி அவர்கள், ஆயத்துல்லாஹ் ஹுஸைன் அலி முன்தசரி அவர்களின் மரணத்திற்கு அனுதாபம் தெரிவிக்கும் செய்தியை அனுப்பியுள்ளார். அச்செய்தி பின்வருமாறு,
'இஸ்லாமிய சட்டமேதை ஆயத்துல்லாஹ் ஹுஸைன் அலி முன்தசரி அவர்கள் இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்ட செய்தி எம்மைத் துயரத்தில் ஆழ்த்துகின்றது. அவர் மிகச் சிறந்த மார்க்க நிபுணராகவும் மதிப்பு மிக்க மேதையாகவும் விளங்கியதனால், பெருந்தொகையான மாணவர்கள் ஆர்வத்துடன் அவரது வகுப்புகளில் கலந்து கொண்டனர். அவர் தனது வாழ்க்கையின் பெரும்பாலான பகுதியை, ஆயத்துல்லாஹ் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் இஸ்லாமியப் புரட்சியை முன்கொண்டு செல்வதிலும், அதன் வெற்றியைப் பாதுகாப்பதிலும், அந்தப் பாதையில் எதிர்கொள்ளும் சிரமங்களையும் வலிகளையும் தாங்கிக் கொள்வதிலுமே அர்ப்பணித்தார். இமாம் கொமெய்னி அவர்களின் இறுதி வருடங்களில், ஆயத்துல்லாஹ் முன்தசரி அவர்கள், சிரமமான ஒரு தேர்வை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எல்லாம் வல்ல அல்லாஹ், தனது பேரருளினால், முன்தசரி அவர்களை மன்னித்து, இஸ்லாமியப் பணிகளின் போது அவர் எதிர்கொண்ட சிரமங்களையெல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன். அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் கவலையையும் தெரிவித்துக் கொள்கின்றேன். எல்லாம் வல்ல அல்லாஹ், அவருக்கு மன்னிப்பளித்து, கிருபையும் செய்வானாக!'
ஆயத்துல்லாஹ் முன்தசரி அவர்கள், கும் நகரிலுள்ள தமது வீட்டில், கடந்த சனிக்கிழமை மாலை, தனது 87ஆவது வயதில் இயற்கை மரணமெய்தி இறையடி சேர்ந்தார்.